Sunday, April 24, 2011

அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை

மனிதனின் நல்வாழ்க்கைக்கு உடல்,உள்ளம் நலமுடன் இருத்தல் மிக அவசியமாகும்.இதை நம்தமிழ் முன்னோர்கள் மிகதெளிவாக
கூறிசென்றுள்ளார்கள்.

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.’

‘உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே’

“மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும்
மறுப்பது இனிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே” [திருமூலர்]

நாம் நோயின்றி நீண்டநாள்வாழ சில அன்றாட
நாள் ஒழுக்கம்பற்றி பார்ப்போம்.
சுவரின்றி சித்திரமில்லாதது போல் உடல் இருக்கும் வரைதான் உயிர்நிலைக்கும்.அகத்தூய்மை,புறத்தூய்மையுடன் உடலைப்பேணிக்காத்தல் நம் கடமையாகும்.

அதிகாலைஎழுந்து பல்துலக்கியபின்புன்புதான் எதுவும்
குடிக்கவேண்டும்.காப்பிதான் உங்கள் உயிர் என்றாலும்
நிறையதண்ணீர் குடித்தபின் காப்பி குடியுங்களளேன்.

காலைக்கடன்களை இயல்பாக கழிக்க பழகிக்கொள்ளவேண்டும்.
மலம் ஒன்று[அ]இரண்டுமுறையும்,சிறுநீர் 5[அ]6 முறைகழித்தல் இயல்பு. இதற்கு மிகினும் குறையினும் நோய் என அறிக.

காபிக்குப்பதிலாக அருகம்புல் சாறு மிகவும் நன்று.
அல்லது கீழ்க்கண்ட பானம் செய்து குடிக்கலாம்
கரிசாலை இலை 100 கிராம்,தூதுவளை,முசுமுசுக்கை,சீரகம்,
வகைக்கு 25 கிராம் இவைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி
வைத்துக்கொண்டு தேவையானபோது தண்ணீரில் காய்ச்சி பால்+
சர்க்கரை [நாட்டு சர்க்கரை] சேர்த்து அருந்தல் நலம்.இதனால்
இரத்த விருத்தி,உடல் வலிமை உண்டாகும், சளி மற்றும் வயிறு
சம்மந்தமான தொந்தரவுகள் உண்டாகாது.

உடற்பயிற்சி பழக்கம் உடலுக்கு வலிமையும் மனதுக்கு அமைதியும் அளிக்கும்.”வாக்கிங்” , யோகாசன முறைகள் நல்ல பயந்தரும். தியானம், மூச்சுப்பயிற்சி உடலுக்கும் உள்ளத்திற்கும் வன்மைதரும்.

தினசரி இருமுறை குளிப்பது உடல் வலி நீங்கும்,கண் தெளிவு,தோல் மிருது உண்டாகும்.வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நலம்.உடல்தூய்மை ஆரோக்கிய தாம்பத்திய வாழ்வுக்கு வழிவகுக்கும்.

சுத்தமான தண்ணீர் நாள்முழுதும் குடித்தால் வயிற்றுப்புண்,சிறுநீரககோளாறுகள் தோன்றாது. உறங்கச்செல்லும் முன் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.தண்ணீரில் சீரகம் போட்டு காய்ச்சி குடிப்பதும் நல்லது.

உணவுமுறைகளில் அறுசுவையும் கலந்த கலப்புணவு உடலுக்கு தேவையாகும்.
[அறுசுவைகள்-காரம்,கைப்பு ,இனிப்பு ,புளிப்பு ,உவர்ப்பு ,துவப்பு]
இனிப்பு ,புளிப்பு ,உப்பு – கபத்தை அதிகரிக்கும்
காரம் ,கசப்பு ,துவர்ப்பு – வாயுவை அதிகரிக்கும்
இனிப்பு ,கசப்பு ,துவர்ப்பு – பித்தத்தை குறைக்கும்
புளிப்பு ,உப்பு ,காரம் – பித்தத்தை அதிகரிக்கும்.”வயிற்றுப்புண்” இருந்தால் அதிகமாகும்.
இனிப்பு – மகிழ்ச்சி,பலம்,உடல் பருமன்
கசப்பு – ஜீரணம்,புழுக்கொல்லி
புளிப்பு – ஜீரணம்,வாயு குறையும்,அரிப்பை அதிகரிக்கும்
உவர்ப்பு – மலம் சிறுநீர்த்தூய்மை ,உடல் மிருதுவாகும்,வியர்வை அதிகரிக்கும்,முடி நரைக்கும்
துவர்ப்பு – இரத்தம் சுத்தமடையும்,தோல் மிருதுவாகும்
கார்ப்பு – ஜீரணம் ,வெப்பம்

உணவைப்பொருத்தவரை அவரவர் உடலுக்கேற்ப ,செய்யும் தொழிலுக்கேட்ப,தட்பவெட்ப காலநிலைகளுக்கு தகுந்தாற்போல் ,எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுவகைகளை பழகிக்கொள்தல் நலம்.

சித்தமருத்துவத்தில்
“ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி
நான்குவேளை உண்பான் பாவி”என்பர்.

பொரும்பாலான நோய்கள் நம் உணவுப்பழக்கம் அதன் மாறுபாட்டில் ஏற்படுகின்றன.

இதை வள்ளுவன் தெளிவான பார்வையில் எளிதாக விளக்குகிறார் பார்ப்போம்:

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
[உண்டது ஜீரணமாதறிந்து உணவை எடுத்துக்கொண்டால் உனக்கு மருந்தே தேவையிலலை]
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதூய்க்கு மாறு”
[நீண்டநாள்வாழ செரிக்கும்தன்மையறிந்து உண்க]
“அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல
தூய்க்க துவரப்பசித்து”
[உண்ட உணவு செரித்து பசித்தபின் புசி]
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிக்கு”
[ஒவ்வாத உணவை ஒதுக்கி,அளவோடு உண்ணும் மனிதனுக்கு வியாதியில்லை]
“இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான் கண் நோய்”
[அளவரிந்து உண்பவனிடம் உள்ள இன்பம்நிலைக்கும், அதிகமாக உண்பவனிடம் நோய் நிலைக்கும்]
“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்”
[பசியின் தன்மை அறியாமல் அதிகம் உண்பவன் அவதிப்படுவான்]

நமது உடலில் ஏற்படும் வேகங்கள் என14 உள்ளன அவற்றை அடக்கவோ அதில் மாற்றம் ஏற்பட்டாலோ நோய் வருகின்றன-

“பதினான்கு வேகப்பேர்கள்
பகர்ந்திட அவற்றைக்கேளாய்
விதித்திடும் வாதம் தும்மல்
மேவு நீர் மலம் கொட்டாவி
கதித்திடு பசி நீர்வேட்கை
காசமோ டிளைப்பு நித்திரை
மதித்திடு வாந்தி கண்ணீர்
வளர் சுக்கிலம் சுவாசமாமே”
1.அபான வாயு – பசியிண்மை ,உடல்வலி ,மலக்கட்டு
2.சிறுநீர் - கல்லடைப்பு , மூட்டுவலி ,குறிவலி
3.மலம் – மூட்டுவலி ,தலைவலி ,பலக்குறைவு ,மயக்கம் ,பசியின்மை
4.பசி - உடல் இளைத்தல் ,களைப்பு ,மயக்கம்
5.தாகம் – தலைசுற்றல் ,உடல் வறட்சி ,வாய் உலர்தல்
6.தும்மல் – தலைவலி,கண் மூக்கு வாய் இவற்றில் வலி
7.இருமல் - மார்புவலி,மூச்சுத்திணறல்,இரைப்பு
8.வாந்தி – சுரம்,இரைப்பு ,பித்தம்
9.கொட்டாவி – செரியாமை,தும்மல்,உடல்வலி
10.கண்ணீர் – தலைவலி,கண்நோய்,பீனிசம்,
11.தூக்கம் – தலைகனம்,கண்நோய்,மயக்கம்
12.ஆயாசம்[களைப்பு] – மயக்கம்,வெப்பம்,நினைவுக்குறைவு
13.சுக்கிலம்[விந்து] – சுரம்,நீர் அடைப்பு,மூட்டுவலி,வெள்ளை
14.சுவாசம்[மூச்சு] – இருமல்,வயிற்றுப்பொருமல்,சுவையின்மை

இவையன்றியும் நாம் நமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும்மனசின் தாக்கங்கலால் வினை வந்துசேர்கிறது.அந்த வகையில்

நோய் உண்டாக்கும் குணங்கள்:
கோபம்
குற்ற உணர்வு
பயம்
சளிப்பு
துக்கம்

நோய் போக்கும் குணங்கள்:
அன்பு
சிரிப்பு
ஆர்வம்
நம்பிக்கை
மனவலிமை[சகிப்புத்தன்மை]
இத்தகைய குணங்களை ஏற்படுத்திக்கொள்தல் எந்தநோயையும் வெல்லமுடியும்.

பகல்பொழுது சிறிதுநேரஉறக்கம் நல்லது.புத்துணர்ச்சி தரும். அதிகநேர உறக்கம் சோம்பலையும் உடல்பருமனையும் ஏற்படுத்தும்.

“திண்ணமி ரண்டுள்ளே சிக்கல டக்காமல்
பெண்ணின் பாலொன்றை பெருக்காமல்-உண்ணுங்கால்
நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பார் தம்
பேருரைக்கில் போமே பிணி” – தேரையர் பதார்த்தகுண சிந்தாமணியில் நோய்வராதிருக்க கூறும் அறிவுரை இது.

மலம்,சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல்,அதிக போகத்தில் ஈடுபடாமல், நீரை காய்ச்சிக்குடித்தும்,அதிக மோர்சேர்த்தும், நெய்யை உருக்கியும் உண்ணவேண்டும் என்கிறார் சித்தர்.

இரவு உணவு குறைவாக எடுத்துக்கொள்ளாம். நார்ச்சத்துள்ள பழவகைகள் சேர்த்தல் மலச்சிக்கலைதவிர்க்கும்.

பால் அருந்தும்பழக்கம் உள்ளவர்கள்- பசும்பால் நலம்.

ஆடை தூய அவரவர் காலசூழலுக்கு ஏற்றபடி அணியலாம். இரவில் தூங்கும்போது தழர்வான ஆடை அணிவது அவசியம்.

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம் ( ஒரு விஞ்ஞான பூர்வ விளக்கம் )

ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.

ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.

இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர்.

கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.

சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன.

இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது.

அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்தி தூண்டப்பட்டு - கைகளை இணைத்து , மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது.

இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது.

சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது.கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்.

ஏன் பைரவ வழிபாடு செய்ய வேண்டும்?


12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.

தேவ,அசுர,மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து,இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.

தன் தமையன் எமன்,பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.

பைரவரை வழிபாடு செய்வது எப்படி?

பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது.பொதுவாக,மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.அதன் உண்மைக்காரணம் வேறு.

இறையாணைப்படி,அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட லட்சுமிகள்.சொர்ணபைரவரிடம்,சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற அதனை பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர்.தாங்கள் பெற்ற சக்தி குறைய குறைய,ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்ளுகின்றார்கள்.அஷ்டமிஅன்று,அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால்,அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட முடியாது.

ஆகவே,அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில்,நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால்,அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.தேய்பிறை அஷ்டமி,குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.

சாதாரணமாக,நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.

மிக அரிதாக,சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய்வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார்.இவ்வாறு,இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான்,மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்.ஏவல்,பில்லி சூனியம்,பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய,வாழ்வில் வளம் பெற,திருமணத்தடைகள் நீங்கிட,பிதுர்தோஷம்,சனி தோஷம்,வாஸ்து குறைபாடுகள் நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பழமையான சிவாலயங்களில் கோவிலின் பாதுகாவலராக பைரவர் இருக்கிறார்.அவரை வழிபாடு செய்தால் போதுமானது.இந்தத் தகவல்களை நமக்கு தேடி ஆராய்ந்து கண்டறிந்தவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.

பிதுர் தோஷமும் பரிகாரங்களும்:

உங்கள் மனைவிக்கு கைப்பிடி சோறும்,கட்டுவதற்கு புடவையும் நீ கொடுத்து அவளை காப்பாற்றினால் நீ கால் ஞானி!

பெற்ற பிள்ளைக்கு பிடி சோறும் கற்பதற்குக் கல்வியும் நீ கொடுத்தால் நீ அரை ஞானி!

மூதாதையர்களையும் மூத்தவர்களையும் மதித்து ஆதரித்து நடந்தால் நீ முக்கால் ஞானி!!

இந்த மூன்றையும் நீ கடைசிவரை செய்து வந்தால் நீ முழு ஞானி!!!

நிர்மலான மனதுடன் நிச்சயம் செய்து வந்தால் உன் மனம் நிர்மலாகும்.


உங்களது பிறந்த ஜாதகத்தில் ராகு,கேதுக்கள் உங்கள் வாழ்வில் பிதுர்தோஷத்தை உண்டாக்குகின்றன.உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,5,7,9-இவ்விடங்களில் ராகு அல்லது கேது நின்றால் உங்கள் வாழ்க்கை தினமும் போராட்டம் தான்!இதுவே பித்ரு தோஷம் ஆகும்.பித்ரு தோஷம் உள்ளவர்கள் என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.

பித்ரு தோஷம் பரிகாரம் செய்தபின்னர்தான் வாழ்க்கை போராட்டம் இன்றி செல்லத்துவங்கும்.பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும்.நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன் மனைவி பிரச்னைகளை உருவாக்கும்.குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.

மகாளய பட்சம் என்று ஒரு காலம் தமிழ்வருடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசி மாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களாகும்.இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.

மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.

திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.திலம் என்றால் எள் என்று அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு.சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.

திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.

கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம க்க்க்ஷேத்த்ரம் என்ற ஸ்தலம் உள்ளது.அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

பிதுர்சாந்தி செய்யாமல் செய்கின்ற எந்த பூஜைகளும் பலன் கொடுப்பதில்லை.கேரளாவில் பிதுர்சாந்திக்கு ஜென்ம நட்சத்திரத்தன்று பசுவுக்கு பருத்திக்கொட்டை பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுக்கின்றனர்.

வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா,இராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.

ராமேஸ்வரத்தில் பிதுர் தோசம் செய்ய ராஹவ சர்மா என்பவரை அணுகவும்.அவரது செல் எண் 94420 44092, 9994 074647.

ஆன்மீக கேள்வி பதில்...


ஜபமும் தியானமும் செய்வதால் வரப்போகும் துன்பத்தை நீக்கிக்கொள்ள முடியுமா?

தீவினைகள் மூன்று வகைப்படும். அவையாவன: வந்தவை, வந்திருப்பவை, வரவிருப்பவை. இவற்றைத் தொலைக்கக்கூடியது நாமஜபம்.

நோய் வந்தால் சில மருந்துகளை உட்கொண்டு நோயை நீக்கிக்கொள்கிறோம். மேலும் வரவிருக்கும் நோயையும் சில மருந்துகளைச் சாப்பிடுவதனால் முன்பே தவிர்த்துக்கொண்டுவிடவும் இயலும் அல்லவா?

அதுபோல், வரவிருக்கும் தீவினைகளையும் இறைவனிடம் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வதால், போதிய அளவு மேற்கொள்ளப்படும் ஜபம், தியானம் போன்ற தவ சாதனைகளினால் விலக்கிக்கொண்டுவிடலாம்.

அல்லது வெகுவாகக் குறைத்துக் கொண்டுவிடலாம்.

சில பரிகாரங்கள், தான தர்மங்கள் போன்றவற்றாலும் துன்பங்களை நீக்கிக்கொள்ள முடியும்.
பொதுவாக மாசில்லாத பக்தி கொண்டவர்கள், துன்பங்கள் நீங்கவேண்டும் என்றுகூட இறைவனிடம் வேண்டுவதில்லை. அப்படிப்பட்டவர்கள் துன்பம் சூழ்ந்தபோதும் அதைத் தாங்கும் சக்தியையும் இறைவன் அருளால் பெறுகிறார்கள்.

கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தபிறகு, அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து வரவேண்டும் என்ற நியதி இருக்கிறதா?

கோயிலுக்குச் சென்று தெய்வத்தை வழிபட்ட பிறகும் தெய்வத்தைப் பற்றிய சிந்தனை நம் உள்ளத்தில் தொடர வேண்டும். கோயிலில் தெய்வத்தைத் தரிசித்த பிறகு அங்கு அமைதியாகச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தால், தெய்வம் நமக்குக் கூறுவது என்ன என்று விளங்கும்.

நாம் தெய்வத்தை வழிபட்டால் மட்டும் போதாது. தெய்வத்தின் பதிலுக்கும் நாம் அமைதியாகச் செவிசாய்க்க வேண்டும் என்பது இந்த வழக்கத்தின் நோக்கமாகும்.

ராமகிருஷ்ணர் தீர்த்த யாத்திரையைப் பற்றித் தெரிவித்த ஒரு கருத்து, உங்கள் கேள்விக்கும் ஓரளவு பொருந்துவதாக இருக்கிறது.

ராமகிருஷ்ணரின் அந்த உபதேசம் வருமாறு.

"வயிறு நிறையப் புல்லைத் தின்ற பசு, ஓர் இடத்தில் அமைதியாகப் படுத்துக்கொண்டு அசைபோடுகிறது. அதுபோலவே, தீர்த்த யாத்திரைக்கு நீ சென்று வந்தால் அந்த அந்தத் தெய்வீகத் தலத்தில் உன் மனதில் எழுந்த தூய எண்ணங்களைப் பற்றிச் சிந்தித்து தனி இடத்தில் உட்கார்ந்து அவற்றிலேயே ஆழ்ந்து போகவேண்டும். அவ்விதமின்றி அங்கிருந்து வந்ததும் அந்த எண்ணங்கள் உன் மனதை விட்டு அகன்றுபோகும்படி நீ உலகியல் விவகாரங்களில் தலையிடுவது கூடாது."

இறைவனைப் பூஜிப்பதற்கு எந்த எந்தப் பூக்களைப் பயன்படுத்தக்கூடாது? எந்த எந்த நேரங்களில் கோயிலுக்குப் போகக்கூடாது?

வாசனை இல்லாத பூக்களையும் மகரந்தமில்லாத பூக்களையும் பூஜைக்கு உபயோகிக்கும் வழக்கமில்லை. கோயிலில் சந்நிதி திறந்திருக்கும் நேரங்கள் அனைத்தும் கோயிலுக்குப் போவதற்கு உரிய நேரங்கள்தான்.

பூஜையின்போது மணி அடிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

நாத தத்துவத்தை நினைவுபடுத்தும் பொருட்டு பூஜையின்போது மணி அடிக்கப்படுகிறது. இது முதலாவது காரணம்.

உலகியல் வேலைகளில் மூழ்கியிருக்கும் மக்கள் மணியோசையைக் கேட்டுத் தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும். இது இரண்டாவது காரணம்.

முக்கியமாகக் கோயில்களில், பல விதமான தீபங்களை சுவாமிக்கு ஆராதனையின்போது காட்டுகிறார்கள். அதன் கருத்து என்ன?

தீபாராதனையில் வரிசையாக அலங்கார தீபம், ஐந்து தீபம், மூன்று தீபம், ஒரு தீபம், முடிவில் கர்ப்பூர தீபம் என்று தீபங்களைக் காட்டும் வழக்கம் இருந்துவருகிறது. பலவாகக் காணும் உலகம், ஐம்பூதங்களில் ஒடுங்கி, அது முக்குணங்களில் ஒதுங்கி, அதுவும் ஒன்றுபட்டு, முடிவில் திரியின் கரியான அகங்காரமும் அழிந்து, கர்ப்பூரம் போல் நிர்க்குணமான பரம்பொருளில் மறைகிறது என்பது கருத்து.

திருவிளக்கிலுள்ள சுடரை நாம் குளிரச் செய்யலாமா அல்லது தானாக குளிரவேண்டுமா?

திருவிளக்குச் சுடரைப் பூவில் பாலைத் தொட்டு நாம் குளிரச் செய்யவேண்டும். அரிசியை விளக்கில் எண்ணெய் இருக்கும் எந்தப் பகுதியிலாவது முதலில் வைத்துவிட்டு, பிறகு பூவினால் சுடரைக் குளிரச் செய்யும் வழக்கமும் இருக்கிறது. வேங்கடாசலபதி பூஜையின்போது நெய் விளக்கு ஏற்றப்படுகிறது. அப்போது பூஜை முடிந்ததும் நெய் தீர்ந்து தானாகவே சுடரைக் குளிரச் செய்வதுண்டு. இவ்விதம் தானாகச் சுடரைக் குளிரச் செய்வதை, `சுவாமி மலை ஏறுகிறார்' என்கிறார்கள்.

பூஜைக்குப் பயன்படுத்திய பூவினாலும் (நிர்மால்யம்) சுடரைக் குளிரச் செய்யலாம். குளிரச் செய்யப்பெற்ற தீபங்கள் தங்களுக்குள், `எனக்குப் பூ கொடுத்தார்கள், உனக்கு என்ன கொடுத்தார்கள்?' என்று, ஒன்றை ஒன்று விசாரித்துக்கொள்கின்றன என்று ஒரு கதை சொல்வார்கள்.

இவையெல்லாம் திருவிளக்குச் சுடரை வாயினால் ஊதி அணைக்கக்கூடாது அல்லது வெறுங்கையினால் அணைப்பது கூடாது என்ற கருத்தை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக எழுந்த கதை என்று நாம் கொள்ளலாம்.

கோயிலுக்குச் சென்றால், மூன்று தடவை பிரதட்சணம் வரவேண்டும்' என்று சிலர் சொல்கிறார்கள். அவ்விதம் சொல்வதற்கு என்ன காரணம்?

கோயிலுக்குச் செல்லும் நாம் சொல், செயல், சிந்தனை மூன்றினாலும் இறைவனிடம் நம்மை ஒப்படைக்க வேண்டும். இந்தக் கருத்தில் அமைந்த ஒரு வழக்கத்தையொட்டி, நாம் ஆலய வழிபாட்டில் மூன்று தடவைகள் பிரதட்சணம் செய்கிறோம்.

கோயில்களில் நிவேதனம் செய்த பின்பு அந்தப் பிரசாதத்தை எதிரில் உள்ள பலிபீடத்தில் வைத்துப் பிறகு காக்கைக்குப் போடுகிறார்கள். இது ஏன்?

பூஜையை வீட்டில் செய்தாலும் கோயிலில் செய்தாலும் பூஜையின் முடிவில் தாழ்ந்த உயிர்களுக்குச் சிறிதாவது உணவளிக்க வேண்டும். அதுதான் பலி. அதற்குத்தான் பலிபீடம்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் போலன்றி வடநாட்டில் மூலவரைப் புகைப்படம் எடுக்கிறார்கள். அதை அட்டைப் படமாகப் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் வெளியிடுகிறார்கள். வடநாட்டுக் கோயில்களுக்கும் தமிழ்நாட்டுக் கோயில்களுக்கும் இந்த வேறுபாடு இருப்பது ஏன்?


தமிழ்நாட்டுக் கோயில்களில் மூலவர் விக்கிரகத்தைப் புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. உற்சவரைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்கிறார்கள். தமிழ்நாட்டின் சில கோயில்களில், ஓவியர்கள் வரைந்த மூலவர் படங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. மற்றபடி கோயிலில் இருக்கும் அதே மூலவர் படங்களை அச்சிட்டு விற்பனை செய்வதில்லை.


மூலவர் உலகம் என்ற மரத்தின் வேர் போன்றவர். உற்சவர் அந்த மரத்தின் மலர், காய், கனி போன்றவர். வேரை இருக்கும் இடத்தை விட்டு அசைத்தால் மரம் உலர்ந்து போகும். மலர், காய், கனிகளை எங்கு வேண்டுமானாலும் கொண்டுபோகலாம்.

மூலவரை அவர் இருக்கும் இடத்தில்தான் தரிசிக்க வேண்டும். அவரைக் கோயிலுக்குச் சென்று தரிசிக்காதவர்களுக்கும்கூட அருள் புரிவதற்காக, அவர் உற்சவமூர்த்தி வடிவத்தில் வீதியில் வருகிறார். மூலவர் வடிவம் ரகசியம். உற்சவ வடிவம்தான் பிரகடனம் என்பது தமிழ்ப்பண்பு.

தென்னிந்தியாவில் பழமையான கோயில்கள் ஆகம சாஸ்திரப்படி அமைக்கப்பட்டு விக்கிரக ஆராதனையும் ஆகமத்தில் கூறியபடி நடந்துவருகிறது. வட இந்தியாவில் இஸ்லாமியர்களின் படையெடுப்புக்களால் பழைய கோயில்கள் சிதைந்து போய், ஆராதனை முறைகளும் பல இடங்களில் சாஸ்திரப்படி இல்லை. அதுதான் வேறுபாட்டிற்குக் காரணம்.

மனித வாழ்க்கையின் இலட்சியம் என்ன?

மறைமுகமாகச் சொன்னாலும், வெளி ப்படையாகச் சொன்னாலும், சுருக்கமாகச் சொன்னாலும், விளக்கமாகச் சொன்னாலும், நேரடியாகச் சொன்னாலும், சுற்றி வளைத்து சொன்னாலும் மனித வாழ்க்கையின் இலட் சியம் ஆத்மஞானம் பெறுவதும், உலகிற்கு நன்மை செய்வதுமே ஆகும்.

நூலோர் கூறியவற்றில் தலைசிறந்து விள ங்குவது `பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' - இது பொருளுக்கு மட்டுமின்றி அருளுக்கும் பொருந்தும்.

ஒன்றா, பலவா பிறப்புக்கள்?


இயற்கையின் ஒரே தடவை மட்டும் நிகழ்கின்ற நிகழ்ச்சி ஒன்றுமில்லை. எல்லா நிகழ்ச்சிகளும் எல்லாப் பொருள்களிடத்தும் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. ஒரு தடவை மழையாக விழுந்த நீர் பல தடவை மழையாக விழவல்லது. அங்ஙனம் நிகழ்ந்து கொண்டும் இருக்கிறது. பிறப்பு மட்டும் ஏன் ஒரு தடவையோடு நின்று விடவேண்டும்!
ஜீவன் என்பது ஓர் ஆத்மா, அதற்கு உடலங்கள் மாறி மாறி அமைவது அதற்குப் புதிய புதிய அனுபவங்களைத் தருதற்பொருட்டேயாம். ஒரே தடவை ஒரு நாள் பள்ளிக்கூடத்துக்குப் போகும் மாணாக்கள் அதிகம் கற்க முடியாது. கல்வி பூர்த்தியாகும் வரையில் திரும்பத் திரும்ப அவன் பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டும். ஆத்மாவானது பரிபூரணத் தன்மை அடையும் வரையில் பிறந்துகொண்டே இருக்க வேண்டும். அதுதான் இயற்கையின் பேரமைப்பாகிறது.

ஒரு பிறப்புதான் உண்டு என்பது ஆத்மாவுக்குத் துவக்கமும் முடிவும் உண்டு என்பதாக முடியும். ஒரு பிறப்போடு அழிந்துபோகும் ஆத்மா வாழ்ந்திருக்கும் போதும் நன்மைக்காகப் பாடுபட வேண்டியதில்லை என்று ஏற்படும். மனிதனுக்கு ஒரே ஜன்மத்தைக் கொடுத்து விட்டுப் பிறகு அவனுடைய பாவபுண்ணியத்துக்கு ஏற்பக் கடவுள் அவனை நரகத்திலோ சுவர்க்கத்திலோ நிரந்தரமாக வைத்து விடுகிறார். என்பதும் பொருந்தாது. ஒரு ஜன்மம் என்கிற குறுகிய காலத்தில் செய்த குற்றத்துக்கு முடிவில்லாத நரகவேதனை என்ற தண்டனையைக் கருணையுடையவன் விதிக்கமாட்டான். மானுட ஆட்சியிலேயே அத்தகைய கொடுமையில்லை. குற்றத்துக்கேற்ற தண்டனையும் நல்ல மானுட ஆட்சி முறையாது அளிக்கிறது. மறுபிறப்பு என்ற புதிய சந்தர்ப்பத்தைக் கடவுள் கொடுக்காவிட்டால் அவன் கொடியவன் என்ற குற்றத்துக்கு ஆளாவான். பேரறிவும் பேரளுமுடைய கடவுள் அப்படி ஒரு ஜன்மத்தை மட்டும் கொடுத்து மனிதனுடைய முன்னேற்றத்தைத் தடைப்படுத்த மாட்டார். பூராயமாய் ஆராய்ந்து பார்த்தால் ஜீவர்களுக்குப் பல பிறவிகள் உண்டு என்னும் கேட்பாடுதான் யுக்திக்கும் அனுபவத்துக்கும் பொருந்தும்.


பாவச் செயல்களைத் தவிர்ப்பது எப்படி?


நாம் எங்கே இருந்தாலும், எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும் கடவுள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நம் உள்ளத்தில் தோன்றும் சிந்தனைகளையெல்லாம் அவர் அறிவார், எங்கும் நிறைந்த அவர் நமக்கு மிகவும் அருகிலேயே இருக்கிறார் - இதை நாம் சரியாகப் புரிந்துகொண்டு மறவாமல் எப்போதும் நினைவில் வைத்திருந்தால், பாவம் செய்பவர்களாக நாம் இருக்க மாட்டோம்.

இறைவன் அருளைத் துணைாயக் கொண்டு வாழ்ந்தால் தான், மனிதன் தீயவற்றிலிருந்து விலகி வாழ முடியும்.

ஆழமான தெய்வசிந்தனைகள், உள்ளத்தில் தோன்றும தீய சிந்தனைகளை அகற்றும, எனவே நாம் நம் உள்ளத்தை் தூய சிந்தனைகளால் தெய்வ சிந்தனைகளால், புனிதமான சிந்தனைகளால் நிரப்பியபடியே இருக்க வேண்டும்.

மரணத்தைப் பற்றிய சிந்தனை இல்லாதவனே பாவச் செயல்களில் ஈடுபடுகிறான். மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் கொண்டவன் தவறு செய்ய மாட்டான்.

மனிதன் கடந்த காலத்தை நினைத்து வருந்தக் கூடாது. எதிர்காலத்தை நினைத்து ஏங்கவும் கூடாது. மாறாக, நிகழ்காலத்தில் ஆன்மிகமும் அறமும் பொருந்திய வாழ்க்கை நடத்துவதிலேயே கருத்துச் செலுத்த வேண்டும்.

தெரிந்தோ தெரியாமலோ நாம் எல்லோருமே தவறு செய்கிறோம். பிறகு வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறோம். கருணைக் கடலான, தயாபரனான இறைவனும் நம் குற்றங்களை மன்னித்துக் கிருபை புரிகிறான்.

கிழக்குத் திசையை நோக்கி அல்லது வடக்குத் திசையை நோக்கித் தியானம், பூஜை செய்ய வேண்டும் என்று சொல்வது ஏன்?

இவற்றுக்குச் சாஸ்திரப் பிரமாணங்கள் உண்டு.

மகாபாரதப் போரில் அர்ஜுனனின் தேர் கிழக்குத் திசையை நோக்கித்தான் இருந்தது. அவனுக்கு வெற்றியும் கிடைத்தது.

ரிஷிகள் பலர் வடக்குத் திசையை நோக்கித் தவம் இருந்தார்கள் என்று நாம் படித்திருக்கிறோம்.

இயமலை வடக்கில் உள்ளது. எண்ணற்ற முனிவர்கள் தவம் செய்த இமயமலை இருக்கும் திசையை நோக்கித் தவம் செய்தால், அவர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்றும் கொள்ளலாம்.

சூரிய பகவான் நாள்தோறும் கண்கண்ட தெய்வமாகக் கிழக்கில் உதித்து நம்மை தட்டி எழுப்பி, நம்முடைய எல்லாச் செயல்களுக்கும் ஒளி தந்து வழி காட்டுகிறார். ஆதலால் கிழக்குத் திசையை நோக்கிய வழிபாடு சிறந்தது என்று ஆயிற்று. இதற்குச் சாஸ்திரப் பிரமாணமும் உண்டு.

நடுப்பகலில் வடக்கும் தியானத்திற்கும் உரியது. மாலையில் மேற்கும் உரியது. தெற்குத்திக்கில் யமலோகம் என்று சாஸ்திரம் கூறியதால், அது சுப காரியங்களுக்கும், தெய்வ வழி பாட்டுக்கும் உரியதாகக் கொள்ளப்படவில்லை. இந்த நடை முறைகளெல்லாம் சாதாரண மக்களுக்குதான்; ஞானிகளுக்கு இல்லை.

திசை பற்றிய இந்த நியமம் தெய்வத்திற்கும் இல்லை. மயிலாப்பூரில் கற்பகாம்பாள் தெற்கு நோக்கி இருக்கிறாள். தட்சிணாமூர்த்தி எல்லா இடங்களிலும் தெற்கு நோக்கித்தான் இருக்கிறார். ஷ்ரீராமகிருஷ்ணர் வழிபட்ட பவதாரிணியும் தெற்கு நோக்கியே இருக்கிறாள்.

இறைவனுக்கு அபிஷேகங்கள், அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்வதான் விளக்கம் என்ன?


பகவத்கீதையில் (9.27) பகவான், "நீ எதைச் செய்தாலும், எதைச் சாப்பிட்டாலும், எதை ஹோமம் செய்தாலும், எதைக் கொடுத்துதாலும், எந்தத் தவத்தைச் செய்தாலும் அதையெல்லாம் எனக்கு அர்ப்பணமாகச் செய்" என்று கூறியுள்ளார்.

நாம் உண்ணும் உணவை இறைவனுக்குப் படைப்பதும், நாம் உடுக்கும் துணியை இறைவனுக்கு உடுத்திய பிறகு நாம் உடுத்துவதும், நாட் கட்டும் வீட்டை அவன் கோயிலாகக் கருதுவதும் சிறந்த தெய்வ ஆராதனையாகும்.

நாம் நீராடி மகிழ்வதால் இறைவனுக்கும் அபிஷேகம் செய்து மகிழ்கிறோம்.

"உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்" என்கிறார். நம்மாழ்வார். இவை அனைத்தும் உன்னத மனதின் இயல்பான வெளிப்பாடுகள். இந்த ஆராதனை முறை நெடுநாளாக நமது மூதாதையர் கண்ட வழிபாட்டுச் சம்பிரதாயம்.

உலக வழக்கில் நமது மரியாதைக்கு உரியவர்கள், அன்பிற்கு உரியவர்கள், உறவினர்கள் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு நாம் ஏதேனும் வாங்கிக் கொடுக்க நினைக்கிறோம்', வாங்கியும் கொடுக்கிறோம். அது போன்று எல்லா உறவுகளின் ஒட்டுமொத்தமான உறவினனான (சரியாகச் சொல்லப்போனால், உண்மையில் உள்ள ஒரே உறவினனான) நம் இறைவனோடு, நீங்கள் குறிப்பிட்ட வழிபாட்டு முறைகள் அனைத்தின் மூலமாகவும் நாம் தொடர்புகொள்கிறோம்.

பிரதிமா, பிரதீகம் ஆகியவற்றை விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


மனிதர்களுக்கு இருப்பதைப் போன்று கை கால் முதலிய அவயவங்களுடன் இருக்கும் வடிவம், அல்லது படம், அல்லது விக்கிரகம், பிரதிமா எனப்படும்.

இறைவன் அல்லது இறைவியின் உருவத்தை நினைவுபடுத்தும் குறி அல்லது அங்கம் `பிரதீகம்' எனப்படும்.

பிரதிமா என்பது தமிழில் விக்கிரகம் அல்லது புதுமை எனப்படும். ஒருவரைப் போல உருவம் செய்து, விக்கிரகத்திலோ படத்திலோ ஊற்றம் வைத்து வழிபடுவது பிரதிமையைப் பூஜிப்பதாகும். உதாரணமாக, இறைவன் அல்லது இறைவியின் திருவுருவத்தை விக்கிரகம் அல்லது படத்தில் எழுந்தருளச் செய்து வழிபடுவது பிரதிமா உபாசனையாகும்.

பிரதீகம் என்றால் அடையாளம் என்று பொருள். இறைவன் அல்லது இறைவி மீது நமக்கு இருக்கும் பக்தியை ஓர் அடையாளத்தை வைத்து, அதில் செலுத்துவது பிரதீக உபாசனையாகும்.

உதாரணமாக திருமாலைச் சாளக்ராமச் சிலையிலும், சிவபெருமானை சிவலிங்க வடிவத்திலும், அம்பாளை ஷ்ரீ சக்கர வடிவத்திலும் வழிபடுவது பிரதீக உபாசனையாகும்.

பிரதிமா, பிரதீகம் ஆகிய இரண்டும் மேலெழந்தவாரியாகப் பார்ப்பதற்கு ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டுக்கும் உள்ள வேறுபாடு - பிரதிமை என்பது உருவம், பிரதீகம் என்பது அடையாளம் என்பதை அறிக.

தினசரி ஆன்மீகக் கடமைகள்

நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது,அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு,அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு,ஒரு நிறை குடம் தண்ணீர்,உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.

வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும்,மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும்,இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர,செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.

கல் உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்.

எந்த வீட்டினுள் நுழைந்ததும்,துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ,நறுமணம் கமழுகிறதோ,அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.

எந்த வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல்லாம் இறைந்து கிடக்காமலிருக்கின்றதோ,வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி விடப்படுகிறதோ,பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்குமோ,அங்கெல்லாம் செல்வம் குவியும்.

எங்கெல்லாம் நெகடிவ்வான வார்த்தைகள் பேசப்படாமலிருக்குமோ,எங்கெல்லாம் விட்டுக்கொடுத்தலும்,இனிய வார்த்தைகள் பேசப்படுமோ அங்கெல்லாம் செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.

ஒரு வீட்டில் ருத்ராட்சம் இருந்தாலே அங்கே பேய் பிசாசு,பில்லி சூனியம் வேலை செய்யாது;யார் தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று அம்மனின் அருட் பிரசாதமான எலுமிச்சை பழம் அல்லது மஞ்சள் காப்பு அல்லது குங்குமம் அல்லது இவை அனைத்தும் வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் நிரம்புமோ அங்கே நிம்மதியும்,செல்வச் செழிப்பும் நிரம்பிக் கொண்டே இருக்கும்.

தனித்திரு விழித்திரு பசித்திரு


தனித்திரு விழித்திரு பசித்திரு ...

தனித்திரு :

ஆசாபாசங்களில் அறிவை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல் , எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் - மனம் தனித்து அமைதி நிலையில் இருத்தல் ஆகும்.

விழித்திரு :

மனம் , புத்தி ,சித்தம் ,அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய் , பொறாமை, காமம் , குரோதம் , லோபம் , மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் - விழித்திருத்தல் எனப்பெறும் அறிவுடன் இருத்தல் ஆகும் .

பசித்திரு :

தேகம் நீடிக்க அளவோடு உண்ணல் , சுத்த ஆகாரத்தை பசித்த போது கொள்ளல் . அமுதமாயினும் அதிகம் புசியாதிருத்தல் . ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக் கொள்ளுதலே பசித்திருத்தல் - முழுமை சித்தி அடையும்வரையில் ஆன்மப் பசியுடன் இருத்தல் ஆகும்.
' வள்ளல் பெருமான்' இராமலிங்க அடிகள்-

விஷ்ணுவினுடைய அவதாரங்கள் ....

மரபியல் விஞ்ஞானி (geneticist) ஜே. பி. எஸ். ஹால்டேன் (J. B. S. Haldane, 1892-1964) என்பவருக்கு விஷ்ணுவினுடைய அவதாரங்கள் பரிணாமவியல் சித்தாந்தத்தை (Theory of Evolution) படிப்படியாக எடுத்துக் காட்டுவதாக கூறினார்.

பன்றி அவதாரமானது நரசிம்ஹ-வாமன அவதாரங்களுக்கு முன்பு வருகின்றது. பாதி-மனிதன் பாதி-மிருகம் மற்றும் குள்ள மனிதன் இஅவர்களுக்கு முன்பாக பன்றி பரிணாம வளர்ச்சியில் இருந்தது. ஹோமோ-செபயின் (Homo sapien) நிலையிலிருந்து ஹோமோ ஹெரக்டஸ் (Homo erectus) நிலையில் வருகின்றது.

பன்றியின் மகத்துவத்தை அறிந்து, கேலன் (Galen) என்ற விஞ்ஞானி பன்றியை அறுத்து, மனித உடலின் தனமையைப் பற்றி விளக்கினார். “காலனும் அலரும் பன்றியும்” (Galen and squealing pig) என்பது அறுவைசிகிச்சை மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குத் தெரியும். மனித உடலை அறுத்து
சோதிக்கத் தடை இருந்தபோது, மனித உடலுக்குப் பதிலாக, பன்றி உடலை அறுத்து ஆராய்ந்தாலே மனிதனைப் பற்றி – மனித உடலியலைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்ற உண்மையினை காலன் அறிந்திருந்தார்.

ஆலகாலமும் அமுதாகும் !


பூமியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாத ஊரர் திருத்தாள் போற்றி.

நால்வர் பெருமக்கள் துதி.


இப்பூவுலகின்கண் வாழும் உயிரினங்களில் ஆறறிவுப் படைத்த மனித இனம் சாலச் சிறந்ததொரு படைப்பாகும்.ஆதி காலத்தில் வாழ்ந்த அருளாளர்கள், ஞானிகள் ஏனையோர், ஆலயங்களில் உருவத்திருமேனி, அருவுருவத் திருமேனிகளில் நீக்கமற எங்கும் நிறைந்துள்ள களங்கமற்ற பரம்பொருளாகிய சிவத்தை எழுந்தருளச் செய்து வழிபட்டு, நித்திய ஆனந்தம் பெற்றனர் என்றால் அது மிகையாகாது.

ஆதிகாலந்தொட்டே நாயன்மார்கள், சந்தானாச்சாரியார்கள் போன்றவர்கள் சைவத்தை ஒளியூட்டி பிரகாசிக்கச் செய்வதில் பெரும் பணியாற்றியுள்ளனர்.சைவாலயங்களின் வழிபாட்டில் பிரதோச கால வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும்.

மகாப் பிரதோசத்தின் மகிமை :


சிவபெருமான் ஆலகால விடத்தை அருந்திய நேரம்தான் பிரதோச வழிபாடாக செயல்படுகிறது

ஒரு பிரதோசம் பார்ப்பது பதினைந்து நாட்கள் கோவிலுக்குச் சென்று வந்த பலனைக் கொடுக்கும்.

பதினோரு பிரதோசம் பார்ப்பது ஒரு கும்பாபிசேகம் பார்த்த பலனைக் கொடுக்கும்.

நூற்று இருபது பிரதோசம் பார்ப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

சிவாலயங்களில் சிறப்பான வழிபாடு மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும்.

பிரதோச விரதம் கடைப்பிடிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் வந்து சேரும் என்பது திண்ணம்.

துன்பங்கள் [ விக்கினங்கள் ] அனைத்தையும் நிவர்த்தி செய்யும் எம்பெருமான் விக்னேசுவரன் என்றும் அழைக்கப் பெறுகிறார்.இம்மையிலும், மறுமையிலும், அறிந்தும், அறியாமலும் செய்யும் பாபமாகிய தோசங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாட்டிற்கு பிரதோசகால வழிபாடு அதாவது பிரதோசம் எனப் பெயர் வழங்குகிறது.

கிறித்துவ மதங்களில், பாவ மன்னிப்பு என்று ஒரு முறை உண்டு.அம்முறையில், மத குருமார்களின் காதில் சென்று தான் செய்த பாவத்தைக் கூறி அதற்கு மன்னிப்பும் கேட்கப்படும். மத குருவும் ஆண்டவரிடம் அந்த பக்தரின் சார்பில் பாவ மன்னிப்புக் கோரி தூது செல்வதாக ஐதீகம்.

இது போலத்தான் நம் இந்து மதத்தில், சைவாகமத்தில், இந்த பிரதோசகால வழிபாடு அமைந்துள்ளது எனலாம்.

ப்ர - தோசம் - மிக்க தோசம், எனப் பொருள்.
அதாவது, போக்குதற்கு இயலாத எத்தகைய தோசமாக இருந்தாலும் அவை அனைத்தையும் நிவர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டதுதான் பிரதோச வழிபாடு.

பிரதோச காலத்தில் சிவபெருமான் நந்தியெம்பெருமான் விருப்பப்படி நர்த்தனக் காட்சி அளிக்கின்றார். நந்தியெம்பெருமானுக்கு அபிசேக ஆராதனை செய்து, விடையின் மேல் உலகையே ஆளுகின்ற சக்தியாகிய பராசக்தியுடன் சிவபெருமான் எழுந்தருளி அடியவருக்கு நித்தியானந்தம் அளிக்கின்றார்.

பிரதோச காலத்தில், விரதமிருந்து வழிபடும் அடியார்களுக்கு கடன், நோய், தரித்திரம், மனக்கவலை, மரணபயம், மன சோர்வு, கோபம், மோகம், பயம் போன்றவைகளால் வரும் தோசங்கள் அனைத்தும் அறவே நிவர்த்தி ஆகும் என உத்தரகாரணாகமம் இயம்புகின்றது.

பசுவின் திருமேனி, பிற உயிரினங்களின் சரீரங்களைக் காட்டிலும் பல்வகையிலும் மேன்மையுடையதாகும். இல்லத்தையும், மற்ற இடங்களையும், பசுவின் சாணம் மற்றும் கோமயம் கொண்டு சுத்தம் செய்வது வழக்கத்தில் உள்ளது. அக்காலந்தொட்டு, வீட்டு வாசலை அதி காலையில் பசுஞ்சாணம் கொண்டு மெழுகுவதால் இலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என பெரியோர் கூறுவர்.

ஆகவே, தருமத்தின் சொரூபமாக விளங்கும் விடையின் மேல் ஏறி வலம் வருகின்றார் இறைவன், இப்பிரதோச காலத்தில்.

தேவர்கள் வாழும் பொருட்டு நஞ்சை உண்டு, கண்டத்தில் தாங்கி, நஞ்சுண்ட கண்டனாக அருள்பாலித்து, அமிர்தத்தை அவர்களுக்கு வழங்கிய காலம் இப்பிரதோச காலமாகும்.

இப்பிரதோச நாளில் வழிபடும் அன்பர்கள் வேண்டுவன அனைத்தையும் பெற்று மேன்மையான வாழ்வைப் பெறுவார்கள் என்பது அனுபவத்தில் உணர்ந்த மறுக்க இயலாத உண்மையாகும்.


பவள சங்கரி திருநாவுக்கரசு.

முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி



முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி

நீர்வை. தி.மயூரகிரி சர்மா

சீர்மிக்க நம் செம்மொழியாகிய செந்தமிழில் எழுந்துள்ள நூல்களுள் பொய்யடிமையில்லாத நல்லிசைப் புலவர் நக்கீரனார் பாடியருளிய திருமுருகாற்றுப்படை சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. இது சிறந்த ஒரு சமய நூலாகவும் பாராயண நூலாகவும் விளங்குகின்ற அதே வேளையில் ஈடிணையற்ற இலக்கிய நூலாகவும் மிளிர்கின்றது. சங்ககாலத்து நூல்களுள் இன்று நமக்குக் கிடைப்பவை பத்துப் பாட்டு நூல்களாகிய திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு , மதுரைக்காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பனவும் எட்டுத்தொகை நூல்களாகிய அகநானூறு, புறநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை என்ற எட்டுநூல்களும் இறையனார் அகப்பொருள் மற்றும் தொல்காப்பியம் என்ற இலக்கண நூல்களுமே என்பது பல்வேறு பேரறிஞர்களும் பொதுவாக ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும்.



இந்தச் சங்கநூல்கள் தனிச்சிறப்பும் செம்மை மிக்க தமிழ் நடையும் கொண்டமைந்து விளங்கக் காணலாம். இச் சங்கநூல்களுக்கெல்லாம் கடவுள் வாழ்த்துப் போல அமைந்திருக்கக் கூடிய சிறப்பும் திருமுறைகளிலே பதினோராம் திருமுறையின் பகுதியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள பெருமையும் கொண்ட அற்புதத் திருநூல் திருமுருகாற்றுப்படை.

சங்ககாலத்தில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் எழுந்துள்ளன. அவையாவன. திருமுருகாற்றுப்படை, பொருபாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) என்பனவாம். ஆற்றுப்படை என்பது வழிப்படுத்தல் என்னும் பொருளுடையது. கூத்தரும், பாணரும், அவர்கள் முதலியவர்களும், தாம் ஒரு வள்ளலிடம் சென்று, பெருஞ்செல்வத்தைப் பெற்று, மீண்டு வரும் வழியில் எதிர்படும் இரவலரிடம் மறைக்காமல் தாம் பெற்ற செல்வத்தைக் கூறி, அவ்வள்ளலிடம் செல்லும் வழியை விளக்கி, தாம் சென்ற அவ்வழியாற் போகச் செய்தல் ஆற்றுப்படை எனப்படுகிறது. இந்த வகையில் அழியாச் செல்வமாகிய பேரின்பத்தைப் பெற விழையும் பெருமக்களை ஆற்றுப்படுத்துவதாக இருப்பது திருமுருகாற்றுப்படை. ஆக, இது ஒரு முந்துதமிழ்ப் பயண வழிகாட்டி.

சங்ககாலம் என்பதும் அக்காலத்தின் இலக்கியங்களின் பண்பும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியன. சங்ககாலப் புலவர்கள் அறிவொழுக்கங்களில் சிறந்தவர்களாகச் சான்றாண்மை மிக்கவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அதனால் அவர்களைச் சான்றோர்கள் என்றும் அவர் தம் செய்யுள்கள் சான்றோர் செய்யுள் என்று கூறும் வழக்கும் ஏற்பட்டுள்ளன. அவர்கள் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற மனப்பாங்கு படைத்தவர்களாகவும் மக்களின் உள்ளக் கிடக்கையை நன்கு அறிந்தவர்களாகவும் அரசர்களை அஞ்சாது நின்று அறநெறியில் வழிநடாத்தும் பண்பு நிறைந்தவர்களாயும் இருந்துள்ளனர். அவர்கள் தம் வாழ்த்து மொழியையும் வாழ்த்துப் பாவையும் உரியவர்க்கே அன்றிப் பிறர்க்கு அளிக்காத் திண்மை உள்ளங் கொண்டவர்களாயும் விளங்கியிருக்கிறார்கள். அதாவது புகழுக்குரியவனையே அன்றிப் பிறரைப் பாடாதவர்களாயும் இருந்துள்ளனர். எனினும் ஜனன மரண சம்சார பந்தத்தில் சுழலும் மானிட ஜன்மங்களான அரசரை அவர்கள் பாடியிருக்கின்றனர். இவர்களின் இச்செயல்களிடத்திலிருந்து வேறுபட்டு இக்காலத்திலேயே சங்கத் தலைமைப் புலவராக விளங்கிய மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரர் பிறவா இறவாப் பெரியோனாய முருகவேட் பெருமானைப் பாடிச் சிறப்பித்துத் தானும் சிறப்புப் பெற்றிருக்கிறார்.

திருமுருகாற்றுப்படை தோன்றக் காரணம் என்ன?

தமிழில் தோன்றிய பக்தி இலக்கியங்களுள் முதன்மை வாய்ந்ததாகவும் முதலில் தோன்றியதாகவும் கருதப்பட்டு வருகின்ற திருமுருகாற்றுப்படை இலக்கியம் எழுந்த வரலாறும் சுவையானது. கடைச்சங்கப்புலவர் தலைவரான நக்கீரனாரின் கதை திருவிளையாடற் புராணத்திலும் இடம்பெறுகின்றது. அதாவது தருமி என்ற ஏழைப்புலவனுக்கு பொற்கிழி அளித்த மதுரையாண்டவன் மீனாள் பாகம் பிரியா தமிழ்ச் சொக்கனின் திருவிளையாடலில், அவனுடன் நேருக்கு நேர் நின்று வாதம் செய்து ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று வாதிட்டு, இறையனாரின் திருப்பாடலில் குற்றங்கண்டு, அதனால் அவர் தம் திருவிளையாடலால் திருநுதல் வெப்பச்சூட்டிற்கு இலக்காகி வெப்பு நோய் வருத்த, அது தீரும் பொருட்டும் தன் குற்றம் நீங்கும் பொருட்டும் பனிபடர் பெருமை கயிலை மாமலைக்குச் செல்லமுற்பட்டு, திருப்பரங்குன்றத்தில் ஒரு நாள் பகற்பொழுதில் சிவபூஜை செய்தார். அப்போது ஒரு அதிசயம் இடம்பெற்றது.

மரத்திலிருந்து விழுந்த இலை இரண்டாகப் பிரிந்தது. ஒரு பாதி பறவையாக மாறிப் பறந்தது. இன்னோர் பாதி மீனாகி நீர்நிலையுள் ஓடி மறைந்தது. இதனைக் கண்ட நக்கீரார் சிவபூஜையிலிருந்து ஒரு கணம் தம்மை மறந்து இவ்வதிசயத்தில் மயங்கிப் போனார். இந்த மாயையைச் செய்து காட்டி சிவபூஜையிலிருந்து நக்கீரர் குழம்பக் காரணம் ஒரு பெண். வெறும் பெண்ணல்ல… கற்கிமுகி என்ற பெண்பூதம். சிவபூசையிலிருந்து தவறிய ஆயிரவரைப் பலி கொடுத்து ஒரு மஹாயாகத்தை ஆற்றக் காத்திருந்த அப்பூதம் முன்னரே தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரைப் பிடித்துத் தன் குகையில் அடைத்து வைத்திருந்தது. ஆயிரமாவது ஆளுக்காகத் தேடிக் கொண்டிருந்தது. இப்போது நக்கீரரையும் பிடித்ததும் அது மிக்க மகிழ்ச்சியடைந்தது. ஆயிரவர் தொகை நிறைவு பெற்றது. மகிழ்ச்சியுடன் யாகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியது. உள்ளே முன்னரே பிடித்து வைக்கப் பட்டிருந்தவர்கள் கதறினார்கள். நக்கீரரை நோக்கி அழுதார்கள். ‘நீர் வந்து எம் உயிரையும் கொண்டு போகிறீரே’ என்று புலம்பினார்கள். அனைவருக்கும் சமாதானம் சொன்ன நக்கீரர் வெற்றிக்கடவுள் வேற்படையுடைய தமிழ்க்கடவுள் முருகவேளை நோக்கி ‘திருமுருகாற்றுப்படை’ என்ற அதியற்புதச் சுந்தரச் செந்தமிழ் நூலை குகைச் சிறையிலிருந்து பாடினார்.

உலகிலேயே சிறையிலிருந்து எழுந்த முதல் இலக்கியம் திருமுருகாற்றுப்படையே.

எல்லோரதும் இதயக்குகையாகிய ‘தகராகாசத்தில்’ நீங்காது உறையும் குகனாகிய குமரன், கற்முகியின் குகை வெடிக்க, பூதம் அழிய, புலவர்கள் சிறை மீள, தன் திருக்கை வேலாயுதத்தைச் செலுத்தியருளினான். நன்றே நடந்தது. இப்படி ஆயிரவர்க்கு உயிர் கொடுத்த இலக்கியம் திருமுருகாற்றுப்படை. இது உடன் கொடுத்த உயிர். இன்று வரை அது எத்தனையோ ஆயிரவர்களுக்கு இவ்விலக்கியம் உயிரளித்து வருவதும் ஈண்டு சிந்திக்கத் தக்கது.

நக்கீரர் தாம் உரைத்த நன்முருகாற்றுப்படை

குறிஞ்சி நிலத்தெய்வம் குமரன். அவனைச் சேயோன் என்று போற்றுகின்றது தொல்காப்பியம். பரிபாடலும் செவ்வேட் பெருமானின் செம்மை மிகு திறம் பேசுகின்றது. நக்கீரனார் உரைத்த இத்திருநூல் நூற்றுப் பதினேழு அடிகளால் இயன்றது. ‘தொடுக்கும் கடவுட் பழம் பாடல்’ என்று போற்றத் தக்கதாய் விழுமிய நடையும் மேம்பட்ட பொருட் செறிவும் கொண்டது. எவ்வழி நல்வழி? என்று வினவுவார்களுக்கு ‘இவ்வழி நல்வழி… இதில் செல்மின்’ என்று வழி சொல்வது திருமுருகாற்றுப்படை. இத்திருநெடும் பாட்டை நாள் தோறும் பாராயணம் செய்யும் இயல்பினர் பலர்.

‘நக்கீரர் தாம் உரைத்த நன் திருமுருகாற்றுப்படையைத்
தக்கோல நாள் தோறும் சாற்றினால்- முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளி
தான் நினைத்த தெல்லாம் தரும்’

என்பது இவ்விலக்கியத்துடன் இணைத்து பாடப்பெறும் இவ்விலக்கியப் பயன் பேசும் வெண்பா ஆகும். ‘உலகம்’ என்ற மங்கலச் சொல்லுடன் ஆரம்பிக்கும் இவ் விலக்கியம்

‘உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
புலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு’

என்று ஆரம்பிக்கின்றது. ‘ஞாயிறைப் போல சுடர் வேல் கொண்ட சுந்தரன் முருகன். அவன் உலகெல்லாம் போற்றத்தக்க பெருமை வாய்ந்தவன். தமிழர்க்கு மட்டுமல்ல, அவன் உலகப் பெருந் தலைவன். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் கல்லினுள் தோரைக்கும் கருப்பைப் புழுவிற்கும் புல்லுணர்வே தந்து போற்றும் தயாளன்..’ இவ்வாறான உணர்வு தோன்ற ஆரம்பமாகிறது திருமுருகாற்றுப்படை.

‘மறுவில் கற்பின் வாள் நுதல் கணவன்’ என்று முருகனை பேசுவார் நக்கீரர். ‘பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’ என்று பெருமானைக் காட்டும் திருஞான சம்பந்தப் பெருமானின் பாடலின் எழுச்சிக்கு நக்கீரார் தம் ஆற்றுப்படை நூலிலேயே அடித்தளம் இடுகின்றார். சமணம், பௌத்தம், கிறித்தவம், போன்ற எந்த ஒரு சமயமும் கடவுளை ஆணும் பெண்ணுமாகக் கண்டதே இல்லை. அதனை செம்மை வழி என்று நினைத்துப் பார்த்தது கூடக் கிடையாது. அப்படியிருக்க இந்து மதம் மட்டுமே இவ்வாறு தமிழிலும் பேசும் வல்லமையை கடந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கைக்கொண்டு விளங்கும் பெருமை வாய்ந்தது என்பதற்கு ஒரு சான்றாயும் இந்நூல் காணப்படுகின்றது.

திருத்தல யாத்திரை செய்ய ஆற்றுப்படுத்திய நூல்

காதலுக்கும் போருக்கும் முதன்மை தந்தது சங்கத்தமிழரின் வாழ்வு. அதற்கு ஏற்றாற் போல காதற் தெய்வமாகவும் வெற்றித் தெய்வமாகவும் விளங்குபவன் முருகன். திருமுருகாற்றுப்படை அவனைப் பேசும் போது

‘இருபேர் உருவின் ஒரு பேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ் இணர்
மாமுதல் தடித்த மறுஇல் கொற்றத்து
எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்’

என்று கூறும். பெருமான் மனிதஉடலும் விலங்கின் உடலும் இணைந்து உருவெடுத்த அசுரனாகிய பெரிய சூரனை, அவன் அஞ்சும் வண்ணம் சென்று, ஆறுவேறு வடிவங்கள் தாங்கி நின்று, அசுரர்களுடைய கொட்டம் அழியும் படியாக, கவிழ்ந்திருக்கும் கொத்துக்களையுடைய மாமரத்தின் வடிவாக அசுரன் உருமாறி நின்ற போது, அதன் அடிமரத்தைப் பிளந்த குற்றமில்லாத வெற்றியையுடைய அறிய முடியாத பேரறிவையும், பெரும் புகழையையும் உடைய செவ்வேலையுடைய அழகன் முருகன் என்று விளக்கிக் காட்டுவார்.

ஆறுமுகனுக்குகந்த ஆறுபடை வீடுகளுள் முதற்படை வீடாகிய திருப்பரங்குன்றில் இறைவன் முருகன் இயற்கையோடிணைந்த அருவுருவ நிலையில் விளங்கும் சிறப்பை விளக்கிய நக்கீரார் வெற்றியின் நகராகிய ‘ஜெயந்திபுரத்தை’ (திருச்செந்தூர்), அவனது இரண்டாவது படைவீட்டை நோக்கி ஆற்றுப்படுத்துகையில் வெற்றிக் களிப்பில் மகிழக்காணலாம். திருச்சீரலைவாய் என்ற செந்திலம் பதியாகிய அவ்வூரின் பெருமை பேச முற்படும் போதே பெருமானின் ஆறு திருமுகத்தின் வண்மையும் அவன் பன்னிரு கரத்திண்மையும் பற்றி சுவைபடப் பேசுகின்றார்.

“மாஇருள்ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரித்தன்று ஒருமுகம்’

என்று பெரிய இருள் நிறை இவ்வுலகு குற்றமின்றியிருக்க பலவகையான கதிர்களைப் பரப்பியது ஒரு முகம் என்பார். இவ்வாறாக ஆறுமுகத்தின் செய்கையையும் அழகுறப் பேசுவார். இவ்விடத்தில் எங்கும் அவர் பரந்த உலக நோக்கில் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பேசியிருப்பது ஈண்டு சிந்திக்கவும் போற்றவும் தக்கது. கதிர் என்ற சொல்லாட்சியில் முருகப் பெருமானின் புகழ்பெற்ற திருத்தலமான கதிர்காமம் ஈழநாட்டில் இருப்பதும் சிந்திக்கத் தக்கதாயுள்ளது.

இப்படியாக ஆறு திருமுகங்களின் செய்கையையும் சொல்லி வந்த நக்கீரனார்,

‘ ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஒர்க்குமே’

என்று சொல்வதை அவதானிக்க முடிகின்றது. இதன் மூலம் சங்ககாலத்திலே வேதநெறியும் வேதநெறி நின்று யாகங்களை வைதீக தர்மத்துடன் நால்மறை முழங்க ஆற்றும் பண்பாடும் நிலவி வந்திருப்பதை தெளிவுறக் காட்டி நிற்கின்றது.

முதலில் ‘மறுவில் கற்பின் வாள்நுதல்’ என்று தேவயானையை காட்டிய நக்கீரர் இவ்விடத்தில் ‘குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின் மடவரல் வள்ளி’ என்று வள்ளியம்மையை போற்றிக் கூறுகின்றார். இதே போல முருகனின் பன்னிரு திருக்கரங்களின் செய்கைகளையும் விளக்கிக் கூறுகிறார். திருச்செந்தூரை ‘உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்’ என்று போற்றித் துதிக்கிறார். முருகனின் மூன்றாவது படைவீடு பழனி என்று அறியப்படும் திருவாவினன்குடி. ஆங்கே உணவையும் உறக்கத்தையும் விடுத்து உண்மைப் பரம்பொருளான முருகனையே சிந்திக்கும் வாழ்வையே தம் வாழ்வாகக் கொண்ட முனிவர் பெருமக்களாகிய ஞான தபோதனர்கள் பழனியாண்டவனைத் தேடிக் காண விழையும் காட்சியை அற்புதமாகச் சித்தரிக்கின்றார்.

அப்போது

‘கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர்’

என்று அவர்களை விழித்துப் போற்றுவார். அத்துடன் ‘காமமொடு கடுங்சினம் கடந்த காட்சியர்’ என்றும் கூறுகிறார்.

இந்த இடத்திலேயே பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளைப் பற்றியும் தேவேந்திரனைப் பற்றியும் புகழ்ந்துரைத்துப் போற்றி சிறப்பிக்கின்றார் நக்கீரனார். இப்படியே பலவற்றையும் சொல்லி ‘ஆவினன் குடி அசைதலும் உரியன்’ என்று சொல்லுவார்.

வைதீகமும் கிராமியமும் வணங்கும் வள்ளல்

சைவ உலகம் நக்கீரரை அவர் தம் பெருமையைக் கருத்தில் கொண்டு ‘நக்கீர தேவ நாயனார்’ என்று கூறிப் பெருமை செய்கின்றது. முருகப் பெருமானின் நான்காவது படைவீடு திருவேரகம் என்ற சுவாமிமலை. கும்பகோணத்திற்குச் சமீபமாக உள்ள இத்திருத்தலத்தில் பெருமான் தகப்பன் சாமியாகக் காட்சி கொடுக்கிறான். இச்சாமிநாதனைச் சொல்ல வந்த நக்கீரர் அந்த இடத்தில் வைதீக வேத தர்மம் பற்றி மிகச்சிறப்பாகச் சொல்கிறார்.

‘இருமூன்று எய்திய இயல்பினில் வழாஅது இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி’

தந்தை, தாய் வழியாக இருவர்க்கும் உரிய கோத்திரமாக தனித்தனியே ஆகக் குறைந்தது இரண்டிரண்டு முனிவர்களையேனும் சட்டிக் காட்டும் பலவாக வேறுபட்ட தொல்குடி (பாரத நாட்டினர் தாம் முனிவர்களின் வழி வந்தவர்கள் என்று சொல்லிப் பெருமை கொள்பவர்கள்).

‘மூன்று வகை குறித்த முத்தீச் செல்வம்’

மூன்றுவகையான யாகாக்னியைப் போற்றுவதையே செல்வமாகக் கொண்டவர்கள்

‘ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்’

மூன்று புரிகளைக் கொண்ட மூன்று நூல்களை (பூணூல்களை) அணிந்தவர்கள் இவ்வாறாக வைதீக, வேத, வேதாங்க தர்மம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே (சங்ககாலத்திலும் அதற்கு முன்னதாகவுமே) தென்னாட்டில் செழித்திருந்ததைப் பதிவு செய்யும் நக்கீரர் சரவணபவனின் ஷடாட்சர மஹாமந்த்ர மகிமையையும் இங்கு சொல்லாமற் சொல்கிறார்.

வைதீக வழக்கில் வடிவேலன் வணக்கம் சொன்ன நக்கீரர் அடுத்து ஐந்தாம் படைவீடாக சுதந்திர மயமான குன்றுதோறாடலைச் சொல்ல வருகையில் கிராமிய வணக்கத்தையும் சிறப்பாகப் பதிவு செய்கிறார்.

திருவேரகத்தைப் பாடும் போது அந்தணர் போற்றும் மந்தி ரரூபமாக வேதத்தின் விழுப்பொருளாய் முருகனைக் காட்டும் பெருமானார் அனுபூதிமான்களுக்கே அல்லாமல், மலை வாழ் வேடருக்கும், அவர்கள் போன்ற அடிநிலை மக்களுக்கும் எளியனாய் வந்து முருகன் அருளும் தன்மையைப் போற்றி செய்கிறார். முருகன் எழுந்தருளியுள்ள மலைகள் யாவும் இதனுள் அடங்கும் எனினும் சிறப்பாக ‘புயற்பொழில் பயற்பதி நயப்படு திருத்தணி’ என்ற திருத்தணிகையை இன்று ஐந்தாவது படைவீடாகக் கொள்வாரும் உளர்.

ஆறாவது படைவீடாக பழமுதிர்ச்சோலை கூறப்படுகின்றது. மாவிளக்கேற்றி சிவந்தமாலைகள் சாற்றி மலர்கள் தூவி செந்தமிழால் பாடி பரமதயாளனாகிய பக்திசுலபனான பரமன் முருகனை வழுத்தும் பாங்கு இங்கு சொல்லப் படுகின்றது. தூபம் காட்டி குறிஞ்சிப் பண்ணிசைத்து முருகனை வழிபடுவது பழைய காலத்தமிழர் மரபு. அதனையும் நக்கீரர் இங்கே சொல்கிறார்.

“வேண்டினர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே”

என்று நிறைவு செய்கிறார். அதாவது தன்னை விரும்பி வழிபடும் அன்பர்கள் தாம் விரும்பியது நிறைவேறி வணங்க அங்கங்கே உறைவதும் நான் அறிந்த வண்ணமான விஷயங்களாகும் என்கிறார்.

முருகனைப் போற்ற ஒரு முந்துதமிழ் மாலை

‘முந்து தமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி’ என்று அருணகிரிநாதர் சாற்றுவார். முந்து தமிழ் மாலை என்ற சொற்பதம் திருமுருகாற்றுப்படையைக் குறிக்க நல்லதொரு சொல்லாகும். இது காலத்தால் முந்தியது. உள்ளடக்கச் சிறப்பால் முந்தியது. இலக்கியச் செழுமையால் முந்தியது. இந்நூல் முருகனைப் பலவாறாகப் போற்றித் துதி செய்கிறது. அவனைப் போற்ற இது அரிய ஒரு நூலாகும்.

‘வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ’
‘வானோர் வணங்கு வில் தானைத் தலைவ’
‘மாலை மார்ப, நூலறி புலவ’
‘வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ’
‘அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக’
‘பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே’
‘மணம் கமழ் தெய்வத்து இளநலம் காட்டி’
‘சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி’
‘போர்மிகு பொருந! குரிசில்!’
‘சேண் நின்று இழுமென இழி தரும் அருவிப் பழமுதிர் சோலை மலைக் கிழவோனே’

என்றும் சொல்லி இத்திருமுருகாற்றுப்படை நூலை முழுமையாக்குகிறார். பழமுதிர்சோலையில் கண்ணனும் கந்தனும் (இரு கள்ளழகர்களும்) கலந்து நிற்கும் எழிலை வர்ணிப்பதுடன் இந்நூல் பூரணத்துவம் பெறுவதாகவும் கொள்ளமுடிகின்றது. முருகாற்றுப் படையை சொன்னால் முருகன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிற்காலத்தைய பக்தி நெறி வளர்ச்சிக்கு இந்நூலின் பங்களிப்பு மிகப்பெரியது. பக்தி நெறிக்கு மட்டுமல்ல அற இலக்கிய எழுச்சிக்கும் காவிய எழுச்சிக்கும் கூட இந்நூல் பங்காற்றியிருக்கிறது.

சுத்த ஜலத்தினால் திருமுழுக்காட்டி, நெய்வேதனங்கள் சமர்ப்பித்து, சோடசோபசாரம், ராஜோபசாரம், முதலியவற்றையெல்லாம் செய்து பகவான் ஸ்கந்தனை ஆயிரம் நாமத்தால் அர்ச்சித்து சகல வாத்திய கீத நிர்த்தன உபசாரங்களுடன் ஊர்வலம் செய்வது எல்லோருக்கும் இலகுவில் செய்யவல்லதல்ல. அப்படிச் செய்யாத போதும் ‘திருமுருகாற்றுப்படையை’ ஓதினால் போதுமாம். அவன் அருள் நிறைவாகக் கிடைக்கும்.

‘பரங்குன்றில் பன்னிரு கைக்கோமான் தன் பாதம்
கரங்கூப்பிக் கண் குளிரக் கண்டு – சுருங்காமல்
ஆசையால், நெஞ்சே, அணிமுருகாற்றுப் படையைப்
பூசையாக் கொண்டே புகல்’

ஐப்பசித் திங்களில் ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகவுள்ள உயரிய நல்ல வேளையில் கந்தவேற் பெருமானைப் பாட, போற்ற நல்லதொரு பாமாலையான இதனைப் பாடிப் பரவுவோம்.

தமிழுக்கும் இந்து தர்மத்திற்கும் உள்ள தொடர்பு மிக ஆழமானது என்பதை நிரூபிக்க கிடைத்த அற்புதப் பொக்கிஷமான, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் அப்பால் புராதனமும் இலக்கியச் செழுமையும் கொண்டு சங்க இலக்கியங்களுக்கு முன்னோடியாகத் திகழும் திருமுருகாற்றுப்படை என்ற ஞானக் கருவூலத்தை, அதன் புகழை உலகெங்கும் பரப்புவோம்

சித்திரையில் ஏராளமான புனித நாட்கள் மலர்கின்றன!



மதுரையம்பதியில் உறையும் தமிழரசியான அன்னை மீனாட்சி, காதல் கொண்டு சுந்தரேஸ்வரரை மணம் புரிந்த நன்னாள் சித்திரை பௌர்ணமியிலேயே நிகழ்ந்தது.

ஆண்டு தோறும் இதை தமிழ் மக்கள் மதுரையிலும் இதர இடங்களிலும் மகிழ்ந்து கொண்டாடுவது இன்றும் நடக்கும் பெரும் திருவிழாவாக அமைகிறது.

திருமணஞ்சேரியிலும் அன்னையும் அப்பனும் மணம் புரியும் நாள் இதே சித்திரையில்தான்!

மகாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்தது சித்திரைத் திங்களில்தான்!

மஹாலக்ஷ்மி பூமிக்கும் வந்ததும் சித்திரையில்தான்!

அம்பிகையின் அவதாரம் சித்திரை அஷ்டமி என்பதும்

சங்கரர் சித்திரை அமாவாசை கழிந்த பஞ்சமியில் உதித்தார் என்பதும்

ராமானுஜரும் இதே சித்திரையிலேயே அவதரித்தார் என்பது

சித்திரையின் மகத்துவத்தை இன்னும் அதிகம் கூட்டும் பெரும் புனித நிகழ்வுகளாகும். .

Tuesday, April 19, 2011

வசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம் வைங்க...

வசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம் வைங்க
இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது மங்களமானதாக கருதப்படுகிறது. அது அழகுத் தொடர்பானதும் கூட. மஞ்சளால் உருவாக்கப்பட்ட தூய்மையான குங்குமத்தை தான் வைத்துக்கொள்ள வேண்டும். குங்குமத்தை கழுத்தில் உள்ள கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, நெற்றியின் உச்சி போன்ற இடங்களில் வைத்துக்கொள்வார்கள். அப்படி பொட்டு வைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
வசியத்தில் இருந்து தப்பலாம்
வசியம் என்பது ஒரு கலை. இந்நாளில் மெஸ்மரிசம், ஹிப்னாடிசம், போன்றவை வழக்கத்தில் உள்ளன. மற்றவர்களை வசியப்படுத்தும் போது தம் பார்வை ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின் பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
கழுத்தின் பின்பகுதி சடையால் மறைக்கப்படுகிறது. ஏனைய பகுதிகளில் பொட்டு வைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது. இதில் புருவ இடைப்பகுதி மிக முக்கியமாகும். இந்த இடத்தில் பொட்டு வைத்துக்கொண்டவர்களை அவர்கள் சம்மதம் இன்றி, எவராலும் ஆழ்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது; வசியப்படுத்த முடியாது.
யோகசாஸ்திரம் கூறும் உண்மை
மூலாதாரம் என்று சொல்லப்படும் பகுதியில் இருந்து பிறக்கும் உள் ஒளி கண்டத்தில் தங்குகிறது. அவ்வொளி கபாலம் மூலம் புருவ மத்திக்கு வருகிறது. அகவொளி நிலைக்கும் இடங்களைப் பொட்டு வைத்து புலப்படுத்துவதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்கள் அனைவரும் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். திருமணமானவர்கள் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக வகிட்டில் வைத்துக்கொள்வது மரபு.

மஞ்சளின் பெருமை

மஞ்சளின் பெருமைஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவசியமில்லை’ என்பது முன்னோர் வாக்கு.
பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கிறது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி, பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு,
குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும் “தாலிக் கயிறில்’ பூசப்படுகிறது.

அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில், பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது.

மஞ்சளின் மருத்துவ குணம்

நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான், இந்து கலாசாரத்தில் முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரும் கண்டு கொள்வதாய் இல்லை.

மஞ்சளின் முக்கியத்துவம்:

இந்து கலாசாரத்தில், சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுவது போல் மற்றவர்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சள் கலந்து தயாரிக்கும் பழக்கம் உலக நாடுகளில் காணப்படுகிறது. மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே தான், போட்டிகள், தேர்வுகள், நேரடித் தேர்வுகளைச் சந்திக்கும் நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது என்று சொல்லப்படுகிறது.

சமையலில் மஞ்சளின் பங்கு
இந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத, இந்திய சமையல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இது இயற்கையான நிறமியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தென்பகுதிகளில், சாம்பார், முட்டைகோசு கறி போன்றவற்றை, மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதேபோல், வடஇந்தியர்கள் கொழுக்கட்டையில் மஞ்சளை பயன்படுத்துகின்றனர். இது ஊறுகாயை பதப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது.

அழகு சாதனப் பொருள்

வெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை.மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர்.

இது முகத்தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்’சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது. இன்னும் சில வீடுகளில் எறும்புகள், பூச்சிகள், கரையான்கள் போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

நோய் தீர்க்கும் அருமருந்து மஞ்சள்

* வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.

* உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.

* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.

* உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.

* மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.

* மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.

மார்கழி மாதம் - அதிகாலையில் எழுவது ஏன்?

தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், (உத்தராயனம்), ஆடியில் இருந்து மார்கழி வரையில் இரவாகவும் (தட்சிணாயனம்) கருதப்படுகிறது. இவ்வாறு பார்க்கும்போது மார்கழி மாதம், தேவர்கள் விழிப்பதற்கு ஆயத்தமாகும் காலை நேரமாகிறது. அக்காலத்தையே 'பிரம்ம முகூர்த்தம்' என்கிறோம். இம்மாதத்திலேயே அதிகாலையிலேயே எழுந்து நீராடி தெய்வத்தை வணங்கினால் நோய் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, தேவர்கள் ஆசீர்வதிப்பர் என்பது நம்பிக்கையாகும். இச்சமயத்தில் தெய்வத் திருவுருவத்தைத் தூக்கிக்கொண்டு வீதி வீதியாக பஜனை பாடிக்கொண்டு செல்வது தேவர்களை பக்தியுடன் எழுப்புவதற்காகத்தான்.

மார்கழியில் அதிகாலையில் எழுவதற்கு அறிவியல் தொடர்புள்ள காரணமும் இருக்கிறது. இம்மாதத்தில் கடும் குளிர் இருக்கும். இதனால் மனிதனின் இரத்த ஓட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டு, சோம்பல் அதிகமாக இருக்கும். இந்நேரத்தில் காலணி அணியாமல் நடப்பதற்கு பாத நரம்புகள் தூண்டப்படும். குளிர்ந்த நீரில் நீராடுவதால் இரத்த ஓட்டம் சீராகும். உடல் புத்துணர்ச்சி அடைந்து ஒரு கட்டுப்பாட்டின் கீழ் வரும். முனம் குழப்பமின்றி அமைதியாக இருக்கும். பழனி முருகன், ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருப்பவர்கள் இந்த மாதத்தில்தான் அதிகமாகக் கோயிலுக்குச் செல்கின்றனர்.

இந்த மார்கழி மாதத்தில் ஒவ்வொருவரும் நமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் நமக்கே எதிரான பகை உணர்ச்சிகளை வெளியேற்ற வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும். ஆசை, குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம், தம்பா, ஈர்ஷ்யா, அசூயை ஆகியன அந்தப் பகை உணர்ச்சிகளாகும்.

ஆசை : பொன், பொருள், கவுரவம், பதவி, புகழ், மக்கள் மீதான ஆசை.
குரோதம் : அடுத்தவனுக்கு தீங்கு செய்து அழிக்க வேண்டுமென்ற ஆத்திரம்.
லோபம் : பிறருக்கோ, தனக்கோ துன்பம் வந்தபோது கூட தன்னிடமுள்ள பொருள்
குறைந்துவிடக்கூடாது என்கிற கெட்ட எண்ணம்.
மோகம் : குறிப்பிட்ட சிலரை மட்டும் மகிழ்விப்பதான செயல்
முதம் : 'தான்' என்ற மமதை
மாச்சர்யம் : தன்னைப்போல் இன்னொருவரும் மகிழ்வோடு இருக்கிறாரே! என்று சகிக்க
முடியாத தன்மை.
தம்பா : பிறர் தம்மை பாராட்ட வேண்டுமென்று செய்யும் தானம்
ஈர்ஷ்யா : தன்னைப்போல் அடுத்தவனும் கவலை, நோய் நொடியுடன்

வாழவில்லையே! ஏன்ற மிக மோசமான கெட்ட எண்ணம்.
அசூசை : தனக்கு தண்;டனை கிடைத்தாலும் பரவாயில்லை, அடுத்தவன் அழிய

வேண்டும் என நினைக்கும் மோசமான மனோபாவம்.

கந்த சஷ்டி கவசம் - உருவான கதை

கவசம் என்பது நம்மை காப்பாற்றக்கூடிய ஒன்று. போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். இந்த கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. இந்த கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தவர். ஆவர் மிக எளிய முறையில் இந்தக் கவசத்தை நமக்கு அளித்துள்ளார்.

தேவராய சுவாமிகள் எப்படி இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா? தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை. வாழ்க்கையே வெறுப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார். அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார். நல்ல அருட்கவிகளும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார். அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவைதாம் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும்.

தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டுள்ளன.

'திருப்பரங்குன்றுரை தீரனே குகனே!

மருப்பில்லாப் பெருமானே! வள்ளி மனோகரா!

என்று ஆரம்பிக்கக் கூடியது, தேவராய சுவாமிகள் இயற்றிய 'திருப்பரங்குன்றத்து கந்த சஷ்டி கவசம்' ஆகும். பொதுவாக எல்லோரும் அறிந்த,

'சஷ்டியை நோக்க சரவண பவனர்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்'

என்று தொடங்கும் பாடல், அவர் இயற்றிய 'திருச்செந்தூர் கந்தர் சஷ்டி கவசம்' ஆகும். இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம்' ஆகும். இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு வசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு, பாடப்பட்டு வருகிறது.

முருகனுக்கு உகந்தநாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு. முருகனுக்கு முகங்கள் ஆறு. முருகனின் படை வீடுகள் ஆறு. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு, 'சரவணபவ' என்ற முருகனின் மந்திரம் ஆறெழுத்து, ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு பேர்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா? சிறப்பு வாய்ந்த இந்த கந்த சஷ்டி கவசம், இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும்.

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பர். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'.

சிந்து சமவெளியில் முருகன் வழிபாடு

சிந்து சமவெளி நாகரீகத்தைப்பற்றியும், மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களைப்பற்றியும் நாம் நன்கு அறிவோம். இன்றைய இந்து மதத்தில் காணப்படும் வழிபாட்டு முறைகளுக்கும், கலை, வாணியல், கட்டிடக் கலை மற்றும் புராணக் கருத்துக்களுக்கும் சிந்து சமவெளி நாகரீகம்தான் ஆணிவேர்.

2010-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற 'உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில்' பின்லாந்து நாட்டைச் சேர்ந்த 'அஸ்கோ பர்ப்போலா' என்ற ஆராய்ச்சியாளர், சிந்து சமவெளி நாகரீகம் பற்றிய அவரது ஆராய்ச்சிக் கட்டுரையை, வெளியிட்டு 'செம்மொழி விருது பெற்றார்'

இவர் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில் சிந்துசமவெளி நாகரீகத்தின்போதே அங்கு முருகன் வழிபாடு இருந்ததாகவும், இதற்கான அழுத்தமான ஆதாரங்கள், மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணி பெண்களுக்கு தீயசக்திகளால் ஆபத்து வரக்கூடாது என்பதற்காகவும், அழகான ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் முருகனை வழிபட்டு வளையல்கள் அணிவித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் இவர் குறிப்பிடுகிறார். ஆன்றைய வளையல் அணிவிக்கும் வழக்கம்தான் 'வளைகாப்பு' என்ற பெயரில் இன்னும் தொடர்கிறதா? அப்படியானால் 'வளைகாப்பு' என்ற நிகழ்ச்சி முருகனை வேண்டியே நடத்தப்படுகிறது என்பது யாரும் அறிந்திராத செய்தி அல்லவா?

முன்னோர் அறிவுரையை கேட்கவில்லையே: உணர்ந்தது ஜப்பான்


இன்றைய யுகத்தில், விஞ்ஞான வளர்ச்சியை நாம் பெருமளவில் நம்பினாலும், முன்னோர் அறிவுரைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். இல்லையெனில், நமக்கு பேரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதற்கு, சமீபத்திய உதாரணம் ஜப்பான்.

ஆம். உலகில் முதியவர்கள் அதிகம் உள்ள நாடு ஜப்பான். இங்கு, சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றால், நாட்டின் வடகிழக்குப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுவரை 12 ஆயிரத்து 500 பேர் இறந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக மாறியுள்ளனர். நாட்டின் வடகிழக்கில் உள்ளது மியாகோ நகரம். இதை சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில், பல நூற்றாண்டுகளாக, சுனாமி தாக்குதல் ஏற்படுவது வழக்கம்.

இது குறித்து எதிர்கால மக்களை எச்சரிக்கும் நோக்கில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அங்குள்ள அனேயாசி கடற்கரையில் கல்வெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி நடக்காதது எவ்வளவு பெரிய தவறு என அப்பகுதி மக்கள் தற்போது சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு உயரங்களில், வடிவங்களில் இருக்கும் இந்த கல்வெட்டுகளில், “இங்கு சுனாமி பாதிப்பு உண்டு, நிலநடுக்கம் வந்தால், சுனாமியும் வரும். எச்சரிக்கையாக இரு’ என்றும், “உயர்ந்த பகுதியில் வசிப்பதே, அமைதியான வாழ்வுக்கு உகந்தது, கல்வெட்டு அமைந்துள்ள இடத்தை தாண்டி, குடியிருப்பை ஏற்படுத்தினால் பேராபத்து நேரிடும்’ என்றும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அதுபோல், எந்தெந்த பகுதியில் சுனாமி தாக்கக் கூடும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், எந்த பகுதியில் வசித்தால், பாதுகாப்பாக இருக்கலாம் என்பது பற்றி குறிப்பிடவில்லை.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த, 12 வயது சிறுவன் யூது கிம்யூரா கூறுகையில், “இந்த கல்வெட்டுகள் பற்றி நாங்கள் பாடங்களில் படித்துள்ளோம். இவை 600 ஆண்டுகள் பழமையானவை. எங்கள் பகுதி சிறுவர்கள் அனைவருக்கும் இது பற்றி தெரியும்’ என்றான். அதே பகுதியில் வசிக்கும் ஐசாமு என்பவர் கூறும்போது, “கடந்த 1896ம் ஆண்டு, பெரும் சுனாமி தாக்கியதை தொடர்ந்து, எங்கள் முன்னோர், மேட்டுப் பகுதியில் குடியேறினர். நாங்களும் அவர்கள் வழியையே பின்பற்றுகிறோம். என்றாலும், கல்வெட்டில் கூறியுள்ளதையும் மீறி, இங்குள்ள சிகெய் கடற்பகுதியில் ஏராளமான பள்ளி மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் நிறுவப்பட்டன. அனைத்தும் தற்போது தரைமட்டமாகி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தான் மிச்சம். கல்வெட்டு வாசகங்கள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் மீண்டும் புதுப்புது கட்டடங்கள் இப்பகுதியில் நிறுவப்படும்’ என்றார்.

முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்


சாதாரணமாக எந்தவொரு நல்ல செயல் ஆரம்பிப்பதற்கு முன்பும் இறைவனை வழிபடுவது பெரும்பாலானோரின் வழக்கம். சிலர் தங்களது பெற்றோரிடம் ஆசி பெறுவர். மேலும் சிலர் தங்களது முன்னோர்களை நினைத்து ஒரு செயலை தொடங்குவார்கள். தற்போது இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆஸ்திரிய நாட்டில் அமைந்துள்ள கிராஸ் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முடிவுகள் அமைந்துள்ளன. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கிறது என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்காக அவர்கள் 80 மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களிடம் தாத்தா, தாத்தாவிற்கு தாத்தா மற்றும் 15-வது நூற்றாண்டினை சேர்ந்த முன்னோர்கள் ஆகியோரை 5 நிமிடங்கள் நினைத்து கொள்ளுமாறு கூறினர். மேலும் தாத்தா, பாட்டி சென்று வந்த இடங்களை சுற்றி பார்த்து வருமாறு கேட்டு கொண்டனர். இதன் பின் அவர்களிடம் பல்வேறு அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்கப்பட்டன. முந்தைய தலைமுறையை நினைவு கூர்ந்தவர்கள் அதிக நினைவாற்றலுடனும், நம்பிக்கையுடனும் காணப்பபட்டனர். அவர்கள் 16க்கு 14 என்கிற வகையில் சரியான பதிலை அளித்தனர். இவ்வாறு முன்னோர் வழிபாடு செய்யாத மற்றொரு பிரிவினர் 16-க்கு 10 என்ற அளவிலேயே சரியான பதிலை அளித்தனர். இந்த ஆய்வு முடிவு ஆனது முன்னோர் வழிபாடு நன்மை தரும் என்ற நம்முடைய பழங்கால முறையை நிரூபிப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?


முருகக் கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே?

முருகன்:

முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று.இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

சரவண பவன்

சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன். என்றும் பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்துவீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம்,ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.

சகரம் என்றால் உண்மை, ரகரம் என்றால் விஷய நீக்கம், அகரம் என்றால் நித்யதிருப்தி, ணக்ரம் என்றால் நிர்விடயமம், பகரம் பாவ நீக்கம் வகரம் என்றால் ஆன்ம் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள்.

ஆறுமுகம்

சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது. சிவத்திற்குரிய தற்புருடம், அகோரம், வாமதேவம், சக்தியோஜதம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள். இத்துடன் சக்தியின் அதோமுகமும் சேர்ந்தது. முருகன் சிவ ஸ்வரூபமாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் சேர்ந்து விளங்குகிறான் என்பதையே இது உணர்த்துகிறது. திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்று சொல்பவர்களும் உண்டு.

குகன்

மனமாகிய குகையில் இருப்பவன். தகராகாசத்தில் வசிப்பவன். அடியார் மனக் கோவிலில் தங்கிடுபவன்.

குமாரன்

கு எனும் அறியாமையாகிய மனப்பிணியை மாறன் அழிப்பதால் குமாரன் ஆனான் என்பார்கள். ஒரு சிலர் கு என்றால் அறுவறுப்பு, மாரன் என்றால் நாசம் செய்பவன் என்றும் பொருள் சொல்கிறார்கள்.

கந்தன்

கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது. ஸ்கந்தம் என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலிமையுடையவன் என்றும் சொல்கிறார்கள்.

விசாகன்

விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றின் நடுவில் உள்ளது ஒளி மிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள்.

வேலன்

வேலன் என்பது வெற்றியத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர். முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான்.

குருநாதன்

பிரம்மவித்யா மரபுகளை விளக்கும் ஆசிரியன். சிவனுக்கும் அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும் உபதேசித்தவன் என்பதால் குருநாதன் ஆனார்.

சுப்பிரமணியம்

சு என்றால் ஆனந்தம். பிரஹ்ம்-பரவஸ்துந்ய- அதனின்றும் பிரகாசிப்பது முருகன். இன்பமும் ஒளியும் வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம். புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்பிரமணியன். மேலும் விசுத்தி என்கிற ஸ்தானத்தில் ஆறுதலையுடைய நாடியாக அசையப் பெற்றிருப்பதற்கும் சுப்பிரமணியம் என்று பெயர். ஆறு ஆதாரங்களை சண்முகம் என்றும் ஆறுதலாகிய உள்ளமே சுப்பிரமணியம் என்றும் சொல்லப்படுகிறது.

வேறு சில பெயர்கள்

கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும், அப்பெண்களுக்கு வாகுலை என்ற மற்றொரு பெயர் உண்டென்பதால் வாகுலேயன் என்றும் ஆண்டிக் கோலத்தில் ஞானப்பழமாக விளங்குவதால் பழநி என்றும் தனது அடியவர்களை உற்ற வேளையில் வந்து காக்கும் சிறப்பால் வேளைக்காரன் என்றும் சிவன், சக்தி, திருமால் மூவரையும் இணைக்கும் தெய்வமாக இருப்பதால் மால் முருகன் என்றும் பெயர்கள் வழங்கப்படுகிறது. இது தவிர இன்னும் எத்தனையோ பெயர்கள் முருகனுக்கு வழங்கப்படுகிறது. இந்த முருகக் கடவுள் தமிழர்களால் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

-சித்ரா பலவேசம்