Saturday, February 19, 2011

மரபுகள் தொடரட்டும் .,.

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் சடங்காகக் கருதப்படுகிறது. திருமணம் என்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது.திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத் தன்மை என்ற பொருளைக் கொண்டது.

இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வத்தின் செயலாகக் கருதப்படுகிறது.புலப்படாமல் அரும்பாக மறைந்திருந்த தெய்வத்தின் பங்கு மலர்ந்து இன்னார்க்கு இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் போது அங்கே தெய்வீக மணம் கமழ்கிறது.சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை செவ்விதமாக, ஓர் ஒழுங்கு முறையோடு, அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள்.

'சடங்குகள்' வாழ்வியல் முறைக்கு அரண் அமைத்து பாதுகாப்பு அளிக்கிறது.வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர சடங்குகளை யாத்தனர் தமிழ்ச் சான்றோர். திருமணத்தின் போது கடைபிடிக்கப்படுகின்ற சில சடங்குகள் பற்றியும் அதன் அர்த்தங்களையும் பார்ப்போம்.

தாரை வார்த்தல்:பழங் காலத்தில் ஒரு பொருளை மற்றவர்க்குக் கொடுக்கும் போது, மீண்டும் மனம் மாறி பிற்காலத்தில் அந்தப் பொருள் என்னுடையது என்று உரிமை கோரக் கூடாது என்பதற்காக தாரை வார்த்துக் கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு ஆவணத்தில் எழுதிக் கொடுப்பதற்கு சமமாகக் கருதப்படுகிறது.அக்காலத்தில் ஆவணங்கள் புழக்கத்தில் இல்லாததாலும் அவ்ஆவணங்களை பதிவு செய்வதற்கு ஏற்ற வசதிகள் காணப்படாததாலும் தாரை வார்த்துக் கொடுத்தல் சிறந்த முறையாகக் கருதப்பட்டது.மீனாட்சி திருமணத்தில் மீனாட்சியம்மையை சோம சுந்தரரின் கரங்களில் திருமால் தாரை வார்ப்பது போன்ற காட்சியை கோவில் சிற்பங்களிலும் சித்திரங்களிலும் நாம் காணுகிறோம். இது போன்ற காட்சியை திருமண அழைப்பிதழில் முன்னட்டையில் அச்சிடுவதையும் அவதானிக்க முடியும்.

தாலி கட்டுதல் :தமிழர் திருமணத்தில் தாலிக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தாலி கட்டுவது என்பது திராவிட மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் மரபாகும். சமுதாயம் வாழத்தக்கதாக இல்லாமல் தறிகெட்டுப் போய் விடும் என்று எண்ணி அதனை நெறிப்படுத்துவதற்காக தாலி கட்டும் சடங்கு உட்பட திருமணச் சடங்குகள் தோற்றுவிக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் கூறப்படுகிறது.'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப'ஐயர் என்று மேலே தொல்காப்பிய நூற் பாவில் குறிப்பிட்டது தலைமைப் பொறுப்பில் உள்ள சான்றோரை ஆகும். கரணம் என்பது சடங்கு எனப் பொருள்படும்.'தாலி' என்ற சொல்லுக்கு 'தாலம்' என்பது வேர்ச் சொல் ஆகும். தாலம் என்பது பனை அல்லது அதன் வழியான பனை ஓலையைக் குறிக்கும்.இந்தப் பெண்ணை நான் மணந்து கொண்டேன். இவளை என்றும் பிரியாமல் வாழ் நாள் முழுவதும் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு காப்பாற்றுவேன் என்று பனை ஓலையில் எழுதச் செய்து அதனை ஓர் உலோகக் குவளையில் இட்டு அதை மஞ்சள் கயிற்றில் கட்டித் தொங்க விட்டு அதனை பெண்ணின் கழுத்தில் ஆண் கட்டும்படி வைத்தார்கள் தமிழ்ச் சான்றோர்கள். தாலத்தினால் ஆன உறுதி மொழியைக் கட்டிய கயிறானதால் அதற்கு தாலி என்ற காரணப் பெயர் அமைந்தது.

மெட்டி அணிவித்தல் :திருமணச் சடங்கின் போது மணப் பெண்ணின் வலது காலை முதலிலும், இடது காலை இரண்டாவதாகவும் அம்மி மேல் மணமகன் எடுத்து வைத்து மெட்டி அணிவிக்க வேண்டும்.வழிப்பயணத்தில் ஈடுபட்ட ஒரு தலைவனும் தலைவியும் பாலை நிலத்தின் வழியாக கடந்து சென்றார்கள். அவர்களைப் போல இன்னொரு இணை எதிரே வந்து இவர்களைக் கடந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த இணையின் செவிலித் தாய் இவர்களைப் பார்த்து, 'உங்களைப் போலவே ஒரு இணை இவ்வழியாகச் சென்றதைக் கண்டீர்களா?' எனக் கேட்டாள். அதற்கு தலைவன், 'இவ்வழியாக ஓர் ஆடவன் சென்றதைக் கண்டேன். உடன் வந்தவரை நான் பார்க்கவில்லை. இவளைக் கேளுங்கள்' என்று தலைவியைக் காட்டினான் என்று திருக்கோவையார் நூல் உரைக்கிறது.ஓர் ஆடவன் வேற்றுப் பெண்ணைப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தாலும் முகத்தை நேராகப் பார்க்காமல் அவளுடைய கால்களைப் பார்ப்பது தமிழர் வழக்கு.அவ்வாறு ஒரு பெண்ணின் கால்களைப் பார்க்கும் போது அதில் மெட்டி இருக்குமானால் அவள் மாற்றான் மனைவி என அறிந்து அவளை தன்னுடைய உடன் பிறந்த சகோதரியாக மனதில் கொள்ள வேண்டும் என்பது மரபு. எனவேதான் பெண்ணின் காலில் மெட்டி அணிவித்தனர் பெரியோர்கள்.

அம்மி மிதித்தல் :உலோகங்கள் எல்லாவற்றையும் வளைக்க முடியும். ஆனால் கருங்கல்லை வளைக்க முடியாது. உடைக்கத்தான் முடியும்.அது போல் கற்பு என்ற பண்பில் நான் வளைந்து கொடுக்க மாட்டேன். அதற்கு ஏதேனும் ஆபத்து வருமாயின் கல் பிளந்து போவது போல என் உயிர்போகும் என்பதைக் காட்டவே அம்மியாகிய கல்லின் மேல் பெண்ணை கால் வைத்து மிதிக்கச் செய்தனர்.கல்லின் பண்பு கல் + பு எனக் குறிக்கப்பட்டு புணர்ச்சியால் கற்பு ஆயிற்று.'கல்லினும் வலிதென் கற்பெனக் காட்டி மெல்லியலாளே மேன்மை அடைக'

அருந்ததி காட்டல் :அருந்ததி என்பவள் வசிட்டரின் மனைவி. கற்பின் மிக்கவளான அருந்ததி தெய்வத் தன்மையால் நட்சத்திரமாகி விட்டாள் என்று கூறுவர்.எனவே அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அவள் போல் நீயும் கற்பில் சிறந்தவளாக இருத்தல் வேண்டும் என்று கூறுவதற்காக அருந்ததி காட்டல் நிகழ்த்தப்படுகிறது.

இவ்வாறு திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றிற்குள்ளும் புதைந்திருக்கும் அர்த்தங்கள் நூறு. இல்லறத்தின் நோக்கத்தை இரு வரியில் ஒரு காவியமாக திருவள்ளுவர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.'அன்பும் அறனும் உடைத்தாயின்இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது'தமிழ் ஆன்றோர் வாக்கிற்கு அமைய எமது மரபுகள் தொடரட்டும் மண்ணின் மணம் வீசட்டும்.

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள் கடவுளின் பெயரைச் சொல்வதால் மனமும் முகமும் மலரும். ஆனந்தம் பெருகும். முருகனை நினைத்து நினைத்து அவனது பெயர்களை உள்ளம் நெகிழ்ந்து உருகிச் சொன்னால் ஆறுமுகக்கடவுள் தன் பன்னிரண்டு கரங்களினால் நாம் வேண்டிய வரங்களை எல்லாம் வள்ளல் போல் அள்ளித் தருவான். சரவணபவன், முருகன், குமரன், கந்தன், குகன், வேலாயுதம், மயில்வாகனன், சேவல்கொடியோன் என்ற திருநாமங்கள் அடியார்களால் சொல்லப்படுபவை. இதில் "சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரம்மிகவும் சிறப்பானதாகும். இதனை மனமுருகி சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. "சரவணன்' என்றால் "பொய்கையில் நாணல் புல்களுக்கு மத்தியில் தோன்றியவன்' என்று பெயர். இதனால், முருகன் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களை "சரவணப்பொய்கை' என்பர்.
________________________________________________

அபிஷேகங்களால் வரும் பலன்கள்


அபிஷேகங்களால் வரும் பலன்கள் நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...

சந்தனாதித் தைலம் - சுகம்தரும். திருமஞ்சனப்பொடி- கடன், நோய், தீரும்.

பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்.

பால் - நீண்ட ஆயுள் கிட்டும்.

தயிர் - நன்மக்கட்பேறு கிடைக்கம்.

நெய் - வீடு பேறு அடையலாம்.

தேன் - சுகம்தரும், குரல் இனிமை தரும்.

கரும்பின் சாறு - நல்ல உடலைப் பெறலாம்.

இளநீர் - போகம் அளிக்கும்.

எலுமிச்சம் பழம் - பகைமையை அழிக்கும்.

விபூதி - போகமும், மோட்சமும் நல்கும்.

சந்தனக் குழம்பு,

பன்னீர் - திருமகள் வருவாள்.

வலம்புரிச் சங்கு - தீவினை நீக்கும், நல்வினை ஆக்கும்.

நெல், எண்ணை - விஷ்சுரம் நிவர்த்தி.

நீர் - சாந்தி உண்டாகும்.

வாழைப்பழம் - பயிர் விருத்தி ஆகும்.

வெல்லம் - துக்க நிவர்த்தி.

சர்க்கரை - சத்ரு நாசம்.

அன்னம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.

மாம்பழம் - வெற்றி கிடைக்கும்.

சொர்ணாபிஷேகம் - இலாபம் தரும்.

கலாபிசேகம் -நினைத்தவை நடக்கும்.

பால் பஞ்சாமிர்தம் - சம்பத்து நல்கும்.

__________________________________________

திருவிளக்கும் தீபமும்

தீப விளக்கு பண்டைய காலந்தொட்டே தமிழர்களிடையே இருந்து வருகிறது.அது நமது வாழ்விலும், தாழ்விலும் நமது சடங்குகளிலும், விழாக்களிலும் பெரும் பங்கு பெற்று வருகிறது. நம் பண்டைய தமிழர்கள் ஒளியின் உயர்வை அறிந்து அதனை நம் வாழ்வோடு இணைத்துள்ளார்கள்.

பண்டைய முறைப்படி விளக்கேற்றுவதே சிறப்புடையது. முற்காலத்தில் ஒரு நாளில் ''விளக்கிடு நாள்'' என்னும் பெயரால் எல்லாக் கோயில்களிலும் தீபம் ஏற்றும் திருநாள் கொண்டாடப்பட்டதாக தெரிகிறது. விளக்கு தமிழர்களுக்கு நிற்பச் செல்வங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. விளக்கு என்னும் சொல் தூய தனித் தமிழ்ச் சொல். விளக்கு மங்களகரமானது என்பதால் அடை மொழியாக 'திரு' என்னும் சொல்லுடன் 'திருவிளக்கு' என்று சிறப்பாக கூறப்படுகிறது. விளக்கு,பதம், தண்டு, அகல் அல்லது தாழி, மொட்டு என்று பல அங்கங்களை கொண்டுள்ளது திருவிளக்கு. அகல், எண்ணெய், திரி, தீபம் முதலியன பல தத்துவ நுட்பங்களை உள்ளடக்கிக் கொண்டிருப்பதாக நமது பெரியோர்கள் கூறுகிறார்கள்.

விளங்கச் செய்வதே விளக்கு என்கிறார்கள் தமிழறிஞர்கள். இருப்பதைக் காட்டுவதே விளக்கு. மறைப்பதை நீக்கி மறைபட்டதை மக்களுக்கு காட்டுவதே விளக்கு. வீட்டில் எழில் குத்து விளக்கு ஏற்றி வழிபடுவது நமது தமிழர் மரபு. விளக்கே இறைவன். ஆகையால் கலை அம்சமும், எழிலும் நிறைந்த விளக்கை இறைவனைக் காட்டும் வழிகாட்டி என்கிறார்கள். மக்களிடத்திலுள்ள அறிவு ஒளியே விளக்கு. எனவே விளக்கு வழிபாடு அறிவை குறிக்கொண்டதாக ஆன்றோர்கள் கண்ட முடிபு. திருவிளக்கு கார் இருளை அகற்றி இன்பகரமான ஒளியைத் தருகிறது. இறைவனாகிய அருட்பெருஞ்சோதி, உலகில் நிறைந்துள்ள அஞ்ஞானமாகிய இருட்டை அகற்றி மெய்ஞானத்தை உணர்த்தும் ஒப்பற்ற உயரிய தத்துவ நுட்பத்தை புலப்படுத்தும் அருட்சோதி

கற்காலம் மாறி உலோகக் காலம் அரும்பியதும் செம்பு, பித்தளை உலோகங்களில் கைவிளக்குகள், தூக்கு விளக்குகள், தூண்டாமணி விளக்குகள், தீவர்த்திகள், நிலை விளக்குகள், குத்து விளக்குகள், சர்விளக்குகள், தீபலட்சுமி விளக்குகள், கிளை விளக்குகள், பூசை விளக்குகள் என்று தோன்றின. பண்டையத் தமிழர் ஒளியை இறைவனாக கண்டனர். ''சோதியே'' சுடரே, சூழ் ஒளி விளக்கே' என்று புகழ்ந்து பாடியுள்ளனர். இறைவனை 'விறகில் தீயினன்' என்றும், 'மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்' என்றும் இறைஞ்சுகிறார்கள்.

''அருள் ஒளி விளங்கிட ஆணவ மெனுமோர் ஆருளற என்னுளத் தோற்றிய விளக்கே துன்புற த்ததுவத் துரிசெலாம் நீக்கிநல் இன்புற என்னுள் தேற்றிய விளக்கே மயலற வழியா வாழ்வு மேன்மேலும் இயலுற வென்னுளத் தேற்றிய விளாக்கே இடு வெளி யனைத்தும் மியலொளி விளங்கிட நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே கரு வெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட உருவெளி நடுவே ஒளிதரு விளக்கே'' என்று அருட்பாவில் வள்ளலார் பாடுகிறார். நமது இலக்கியங்களில் சான்றோர்கள், இறைவனின் ஒளியை, விளக்கினைப் பற்றி நிறைய கூறியுள்ளார்கள்.

''தூண்டாவிளக்கின் சுடரணையாய்'' -என்பது சுந்தரமூர்த்தியின் மொழி ''ஞானச் சுடர் விளக்காய் நின்றவன்'' '' விறகிற றீயினன் பாலிற் படு நெய்யோன்'' '' மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்" -என்று சம்பந்தாரும் ஒளி வளர் விளக்கே உலப்பிலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்குத் திரள் மணிக்குன்றே சித்தத்துட் தித்திக்கும் தேனே '' - என்று திருமாளிகைத் தேவரும் "அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்" - என்று சேக்கிழாரும் சிந்தாதேவி செழுங்கலை நியமத்து நந்தா விளக்கே... பாவாய் வானோர் தலைவி மண்ணோர் முதல்வி - மணிமேகலையும் ''சுடரிற் சுருட்டும் திருமூர்த்தி -என்று சிந்தாமணியும் ''திங்களைப் போற்றும்! திங்களைப் போற்றுதும்! கொங்கலர் தார் சென்னி குளிர் வென்குடை போன்றின் வங்க ணுல களித்தலான்; ஞாயிறு போற்றும்! ஞாயிறு போற்றுதும்! காவிரி நாடன்றிகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந் திரிதலான்; - என்று சிலப்பதிகாரமும், முந்நீர் மீமிசை பலர் தொழத் தோன்றி யேமுற விளங்கிய சுடர்'' - என்று நற்றிணையும் ''விளக்கினை ஏற்றி வெளினய அறிமின் விளக்கின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடையார்கள் விளக்கின் விளக்கும் வுளக்கவர் தாமே '' -என்றும் பாடியுள்ளார்கள்.

உலகமெங்கும் முச்சுடர் வழிபாடு பரவி இருந்தாலும் சிறப்பாக கொண்டாடியவர்கள் நம் தமிழர்கள். '' சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே சுரி குழற் பணமுலை மடந்தை பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய் பங்கயத் தயனும் மாலறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையுள் நிறைமலர்க் குருந்த மேவிய சீர் ஆதியே யடியேன் ஆதரித்தழைத்தால் அதந்துவே என்றருளாயே '' -மணிவாசகர் திருவாசகம் '' உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரரனார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலளைந்தும் காளா மனிவிளக்கே'' - திருமூலர் திருமந்திரம்

பண்டைத் தமிழகத்தில், இன்று கொண்டாடப்பட்டு வரும் ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி போன்ற பண்டிகைகளில் எதுவும் கொண்டாடப்பட்டதாக தெரியவில்லை. தீபாவளி கூட கொண்டாடியதாகத் தெரியவில்லை. பங்குனி மாதம் பாரதப்போர் நடைபெற்றதால் அம்மாதத்தில் நல்ல காரியங்கள் எதையும் செய்யார். ஆடி மாதத்தில் சிவபக்தனான ராவணன் இறந்து விட்டதால் அம்மாத்தில் திருமணம் போன்ற மங்களகரமான காரியம் செய்யப்படுவதில்லை. தை மாதம் தமிழ் மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடி வந்தார்கள்.பண்டைக் காலம் தொட்டே இது ஒரு பெரும் பண்டிகையாக மிளிர்கிறது. அடுத்து சிறப்பாக தமிழர்கள் கொண்டாடி வரும் பண்டிகை தீபத்திருநாளாகும். இது கார்த்திகைத் தீப திருநாள் என்றும் கொண்டாடுகிறார்கள். கேரளத்திலும் ஆந்திராவிலும் இத்திருநாள் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டைத் தமிழர்கள் மலைச் சிகரங்களில் விளக்கேற்றி விழா கொண்டாடி விருந்துண்டு களி கொண்டு ஆடி களித்திருப்பதை சங்க நூற்களில் சான்று உண்டு. ' அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள் செல்சுடர் நெடுங்கொடி போல் ' -என்று நற்றிணை கூறுகிறது. கார்த்திகை நாள் பெயரலே பெற்ற அறஞ்செய்தற்குரிய திங்களில் எடுக்கப்பட்ட விசும்பிலே செல்கின்ற 'ஒளியையுடைய நீண்ட விளக்குகளின் வரிசை போல்' என்று உரை கூறப்படுகிறது.

தீபம் நாம் அன்றாடம் காலையும் - மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியும் ?

தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் - மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வடதிசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும். தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும். திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள் திரியில்லாமல் தீபம் ஏது?

சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி. முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது. தம்பதிகள் மனமொத்து வாழவும் - மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். திரியுடன் எண்ணையிட்டால்தானே தீபம் எரியும்? எந்த எண்ணையிட்டாலும் விளக்கு எரியும்தான்.

நலம் வேண்டி நாம் விளக்கேற்றும்போது அதில் விடும் எண்ணையினால் பலன்கள் நேரெதிராகவும் வாய்ப்புகள் உண்டு..? ஏதோ இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று.

கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.

அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது ஆமணக்கு எண்ணை தீபம். எள் எண்ணை (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது; நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது.

மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணை கொண்டு தீபமேற்ற வேண்டும்.

செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இஇலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண்ணைகளையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.
Thiruthalam